காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு


காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு
x
தினத்தந்தி 12 Feb 2020 8:36 PM GMT (Updated: 12 Feb 2020 8:36 PM GMT)

காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

புதுக்கோட்டை,

காவிரி-வைகை-குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோருக்கு புதுக்கோட்டை மாவட்ட அனைத்து விவசாயிகளின் சார்பில் நன்றி தெரிவிக்கும் கூட்டம் புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது:- புதுக்கோட்டை மாவட்ட மக்களின் 100 ஆண்டு கால கனவுத்திட்டமான காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தை முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். இத்திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ.7,677 கோடி ஆகும். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 12 தாலுக்காக்களில் உள்ள சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இதன் மூலம் பயனடைய உள்ளது.

இத்திட்டத்தால் காவிரி முதல் தெற்கு வெள்ளாறு வரை 119 கிலோ மீட்டர் தூரத்திற்கு கால்வாய் அமைத்து அதில் பெறப்படும் உபரி நீர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 760 கண்மாய்களுக்கு கிடைக்கும். இதன்மூலம், ஏராளமான விவசாய நிலங்கள் பாசன வசதி பெற உள்ளது.

ஏற்கனவே புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொது மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு பொது மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட காவிரி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது காவிரி ஆறு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு கொண்டு வரப்படுவதால் விவசாயம் செழித்து பொருளாதார முன்னேற்றம் ஏற்பட வழிவகை ஏற்பட்டுள்ளது. மேலும், மற்றொரு முக்கிய நிகழ்வாக காவிரியில் கோதாவரி இணைப்புத் திட்டம் நிறைவேற்றப்படும்போது புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஆண்டு முழுவதும் காவிரி தண்ணீர் கிடைப்பது உறுதி செய்யப்படும்.

மேலும் காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்தை அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், 9 ஏ நத்தம் பண்ணை ஊராட்சி மற்றும் கவிநாடு மேற்கு ஊராட்சியில் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இங்கு வழங்கப்பட்டுள்ளது.

காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத்திட்டத்தில் மற்றும் ஒரு மைல் கல்லாக நாளை மறுதினம் நடைபெற உள்ள பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தலைவர் பி.கே.வைரமுத்து, எம்.எல்.ஏ.க்கள் ரத்தினசபாபதி(அறந்தாங்கி), ஆறுமுகம்(கந்தர்வக்கோட்டை), மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் சின்னதம்பி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயலட்சுமி தமிழ்செல்வன், இந்திய விவசாய சங்க மாநில பொது செயலாளர் ஜி.எஸ்.தனபதி உள்ளிட்ட விவசாய சங்க பிரதிநிதிகள், அனைத்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக, அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் திலகர் திடலில் இருந்து மாட்டு வண்டியில் ஊர்வலமாக நகர்மன்றத்திற்கு வந்தனர்.

மேலும் இந்த திட்டத்தை நினைவுபடுத்தும் வகையில் புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் ஜீவா.சுப்பிரமணியம் மண்வெட்டியை அமைச்சருக்கு நினைவு பரிசாக வழங்கினார்.

Next Story