மனைவியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை


மனைவியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 21 Feb 2020 10:00 PM GMT (Updated: 21 Feb 2020 7:44 PM GMT)

மனைவியை கொலை செய்தவருக்கு ராமநாதபுரம் கோர்ட்டு ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.

ராமநாதபுரம்,

ராமேசுவரம் ஏரகாடு பகுதியை சேர்ந்தவர் கோபால் (வயது 40). இவரின் மனைவி வனிதா(34). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். வெளிநாட்டில் வேலைபார்த்து வந்த கோபால் கடந்த 2013-ம் ஆண்டு விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது கோபாலின் தந்தை பிச்சை பூர்வீக சொத்தினை விற்று உடன் பிறந்த தங்கை களுக்கு பங்கு கொடுக்குமாறு கூறினாராம்.இதற்கு கோபாலின் மனைவி வனிதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை 19-ந் தேதி இரவு அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்ட போது ஆத்திரமடைந்த கோபால் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து வனிதாவின் அண்ணன் உமையசெல்வம் அளித்த புகாரின் பேரில் ராமேசுவரம் நகர் போலீசார் வழக்குபதிவு செய்து கோபாலை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி பகவதியம்மாள் மனைவியை கொலை செய்த கோபாலுக்கு ஆயுள்தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 3 மாதம் ஜெயில் தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் மனோரஞ்சிதம் ஆஜரானார்.

Next Story