திருவாரூர் மாவட்டத்தில், இதுவரை 3 லட்சத்து 62 ஆயிரம் டன் நெல் கொள்முதல் கலெக்டர் தகவல்


திருவாரூர் மாவட்டத்தில், இதுவரை 3 லட்சத்து 62 ஆயிரம் டன் நெல் கொள்முதல் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 27 Feb 2020 11:30 PM GMT (Updated: 27 Feb 2020 5:12 PM GMT)

திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 62 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் ஆனந்த் தெரிவித்தார்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஆனந்த் தலைமை தாங்கினார். இதில் கூடுதல் கலெக்டர் கமல் கிஷோர், வேளாண்மை இணை இயக்குனர் சிவக்குமார், நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் (பொறுப்பு) சிற்றரசு, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜெயராமன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்) ஹேமா ஹிப்சிபா நிர்மலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில் விவசாயிகள் கலந்துகொண்டு பேசினர். இதன் விவரம் வருமாறு:-

மாசிலாமணி:-

காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த தமிழக அரசிற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இதற்காக அமைக்கப்பட்ட குழுவில் 3 விவசாயிகள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவில் விவசாயிகள் எண்ணிக்கையை கூடுதலாக்கிட வேண்டும்.

ரெங்கராஜன்:- நல்லூர் ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த இடம் களம் புறம்போக்கு என்ற நிலையில் கோவில் இடம் என தவறுதலாக தகவல் அளிக்கப்பட்டதால் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் ஆய்வு செய்து நெல் கொள்முதல் நிலையம் அமைத்திட வேண்டும்.

தூர்வாரும் பணிகள்

சேதுராமன்:- நெல் கொள்முதல் நிலையத்தில் பற்றாக்குறை இன்றி கொள்முதல் நடைபெற போதிய சாக்கு வழங்கிட வேண்டும். ஏப்ரல் மாதம் நெல் கொள்முதல் நிலையத்தை மூடிட வேண்டும். தூர்வாரும் பணிகளை மார்ச் மாதம் தொடங்கிட வேண்டும்.

வடுகநாதன்:- மாங்குடி கடைவீதியில் போக்குவரத்து அதிகமாக இருந்து வருகிறது. இந்த பகுதியில் தான் பள்ளிக்கூடம் அமைந்துள்ளது. எனவே விபத்துக்களை தடுக்கும் வகையில் வேகத்தடை அமைக்க வேண்டும். இங்கு செயல்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டிடம் பழுதின் காரணமாக மூடப்பட்டது. எனவே மக்களின் அவசர உதவிக்காக ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தர வேண்டும்.

மாவட்ட ஊராட்சி உறுப்பினர் கலைவாணி:- பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட நிலையில் இயற்கை விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். விவசாய உற்பத்தி மண்டலமாகவும், விளை பொருட்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்ய மையம் ஏற்படுத்திட வேண்டும்.

போராட்டம்

டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ.:- காவிரி டெல்டா மாவட்டங்கள் வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட நிலையில் ஓ.என்.ஜி.சி. கெயில் நிறுவனம் கியாஸ் எடுப்பது குறைந்து வருகிறது. எனவே புதிதாக கிணறுகள் அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க கூடாது. 2017-18-ம் ஆண்டிற்கான பயிர் காப்பீட்டு தொகை விடுப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கிட கோரி அடுத்த மாதம் (மார்ச்) முதல் வாரத்தில் இன்சூரன்ஸ் நிறுவனங்களை கண்டித்து போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

நடவடிக்கை

பின்னர் கலெக்டர் பேசுகையில்,

விவசாயிகளின் தேவைக்கேற்ப நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளின் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் 463 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, ஒரு நாளைக்கு 12 ஆயிரத்து 586 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 3 லட்சத்து 62 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 85 ஆயிரத்து 280 விவசாயிகளுக்கு 652 கோடியே 74 லட்சத்து 38 ஆயிரத்து 138 ரூபாய் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. நேரடி நெல்கொள்முதல் தொடர்பாக பெறப்படும் புகாருக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story