சேலம் அம்மாபேட்டையில் பரபரப்பு கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தாய் கொலை மகன் வெறிச்செயல்


சேலம் அம்மாபேட்டையில் பரபரப்பு கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தாய் கொலை மகன் வெறிச்செயல்
x
தினத்தந்தி 5 March 2020 12:00 AM GMT (Updated: 4 March 2020 9:55 PM GMT)

சேலம் அம்மாபேட்டையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தாயை அவரது மகனே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம்,

சேலம் அம்மாபேட்டை காமராஜ் காலனியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மனைவி நல்லம்மாள் (வயது 65). இவர்களுக்கு சிவகுமார் (47) என்ற மகனும், லதா என்ற மகளும் உள்ளனர். ராஜேந்திரன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். லதா திருமணம் முடிந்து கணவருடன் அம்மாபேட்டையில் வசித்து வருகிறார். சிவகுமாருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

இதனிடையே நல்லம்மாள் அவரின் சொந்த ஊரான மின்னாம்பள்ளி காரிப்பட்டியில் மகன் சிவகுமாருடன் வசித்து வந்தார். அப்போது நல்லம்மாள் கீழே விழுந்ததில் உடல்நிலை பாதிக்கப்பட்டதுடன், அவரது காலில் காயம் ஏற்பட்டது. இதனால் அவரால் நடக்க முடியவில்லை. இதையடுத்து தாயும், மகனும் அவர்களுடைய விவசாய நிலங்களை விற்றுவிட்டு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு அம்மாபேட்டையில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர்.

கொலை

நல்லம்மாள் அம்மாபேட்டை பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இருந்தபோதிலும் அவரால் நடக்க முடியாததால், வீட்டில் படுத்த படுக்கையாக இருந்து வந்தார். லதா தனது தாயாருக்கு சாப்பாடு சமைத்து வைத்து விட்டு செல்வார். இந்த சாப்பாட்டை நல்லம்மாள் கேட்கும் போது சிவகுமார் ஊட்டிவிடுவார்.

இதேபோல் அவர் கேட்கும்போது மருந்து, மாத்திரைகளையும் சிவகுமார் கொடுத்து வந்தார். இவ்வாறு உடல்நிலை பாதிக்கப்பட்ட தனது தாயை பராமரிப்பதில் சிவகுமாருக்கு சிரமம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று மதியம் 1 மணியளவில் நல்லம்மாளை, சிவகுமார் சேலையால் முகத்தை மூடி, வாயையும் பொத்தி கொன்றுள்ளார்.

போலீசில் சரண்

பின்னர் பயத்தில் அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் சிவகுமார் சரண் அடைந்தார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அதன்பின்பு அவர்கள் நல்லம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத்ெதாடர்ந்து சிவகுமார் மீது அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில், சேலம் அம்மாபேட்டையை சேர்ந்த ஒரு பெண்ணுடன் சிவகுமாருக்கு கள்ளக்காதல் இருந்துள்ளது. இதனால் அவர் அவ்வப்போது அந்த பெண்ணை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இதையறிந்த நல்லம்மாள் அவர்களை கண்டித்துள்ளார்.

பெண்ணிடம் விசாரணை

இதையடுத்து கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த நல்லம்மாளை கொலை செய்து விடுவது என சிவகுமாரும், அந்த பெண்ணும் முடிவு செய்ததாக தெரிகிறது. அதன்படி நேற்று மதியம் சிவகுமார் தனது தாய் நல்லம்மாளை அவரது சேலையால் முகத்தையும், வாயையும் பொத்தி கொன்றுள்ளார். அப்போது அந்த பெண்ணும் வீட்டில் இருந்ததாக விசாரணையில் தெரியவந்தது.

எனவே அந்த பெண்ணும் இந்த கொலைக்கு உடந்தையாக இருந்தாரா? என்பதை அறிய, அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story