பட்டுக்கோட்டையில், பயங்கரம்: வாலிபரை கொன்று முகத்தை தீ வைத்து எரிப்பு போலீசார் விசாரணை


பட்டுக்கோட்டையில், பயங்கரம்: வாலிபரை கொன்று முகத்தை தீ வைத்து எரிப்பு போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 16 March 2020 10:30 PM GMT (Updated: 16 March 2020 8:52 PM GMT)

பட்டுக்கோட்டையில், வாலிபரை கொன்று முகத்தை தீ வைத்து எரித்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பட்டுக்கோட்டை,

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை லட்சத்தோப்பு அம்மன் நகர் பகுதியில் கருவேலங்காடு உள்ளது. இங்கு நேற்று முகம் எரிந்த நிலையில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கிராம நிர்வாக அதிகாரி மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் பட்டுக்கோட்டை நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

உடலில் காயம்

இறந்து கிடந்த வாலிபரின் வலது கையில் சிங்கத்தின் உருவப்படம் பச்சை குத்தப்பட்டு இருந்தது. உடலில் சிகரெட்டால் சுட்ட காயம் இருந்தது. உடல் அருகே சாராய பாட்டிலும் கிடந்தது. போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் அந்த வாலிபரை கொலை செய்த மர்ம நபர்கள், முகத்தில் மண்எண்ணெய்யை ஊற்றி தீ வைத்து எரித்தது தெரிய வந்தது.

தஞ்சையில் இருந்து வரவழைக்கப்பட்ட போலீஸ் மோப்ப நாய், கொலை செய்யப்பட்டு கிடந்தவரின் உடல் அருகில் இருந்து ஓடியது. சிறிது தூரம் ஓடிச்சென்ற மோப்ப நாய் பின்னர் அங்கேயே நின்று கொண்டது. வாலிபரின் உடலை கைப்பற்றிய போலீசார், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

கொலை செய்யப்பட்ட வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக அவரை கொன்று முகத்தை தீ வைத்து எரித்துள்ளனர்? என்பது பற்றிய விவரங்கள் போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவில்லை.

இதுகுறித்து மகாராஜசமுத்திரம் கிராம நிர்வாக அதிகாரி சரவணகுமார் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை செய்யப்பட்ட வாலிபர் யார்? கொலையாளிகள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வாலிபர் கொலை செய்யப்பட்டு, முகம் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story