மானூர் அருகே, வரதட்சணை கொடுமையால் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை - உதவி கலெக்டர் விசாரணை


மானூர் அருகே, வரதட்சணை கொடுமையால் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை - உதவி கலெக்டர் விசாரணை
x
தினத்தந்தி 10 April 2020 11:15 PM GMT (Updated: 10 April 2020 6:59 PM GMT)

மானூர் அருகே வரதட்சணை கொடுமையால் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக நெல்லை உதவி கலெக்டர் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

மானூர், 

நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள கரம்பையை சேர்ந்தவர் ஈஸ்வரன் மனைவி பேச்சியம்மாள் (வயது 29). இவர்களுக்கு திருமணம் முடிந்து 6 மாதங்கள் ஆகிறது. 

இந்தநிலையில் கூடுதல் வரதட்சணை கேட்டு ஈஸ்வரன் குடும்பத்தினர் பேச்சியம்மாளிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளனர். இதனால் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் பேச்சியம்மாள் கோபித்துக் கொண்டு நெல்லை டவுன் கருப்பந்துறையில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றார். பின்னர் சமாதானம் ஏற்பட்டு கணவர் வீட்டுக்கு பேச்சியம்மாள் வந்தார்.

வந்த அன்றே தனது வீட்டின் பின்புறம் உள்ள முட்புதரில் வைத்து பேச்சியம்மாள் விஷம் குடித்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு காரில் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், பேச்சியம்மாள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து பேச்சியம்மாளின் தந்தை ராமலிங்கம் (78) மானூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் தாழையூத்து துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்னரசு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

திருமணம் முடிந்து 6 மாதங்களே ஆனநிலையில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து நெல்லை உதவி கலெக்டர் மணீஷ் நாரணவரே மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story