திண்டுக்கல், கொடைக்கானலில் எளிய முறையில் நடந்த திருமணங்கள்


திண்டுக்கல், கொடைக்கானலில் எளிய முறையில் நடந்த திருமணங்கள்
x
தினத்தந்தி 30 April 2020 3:32 AM GMT (Updated: 30 April 2020 3:32 AM GMT)

திண்டுக்கல், கொடைக்கானலில் ஆடம்பரமாக நடைபெற இருந்த 2 திருமணங்கள், ஊரடங்கு உத்தரவு காரணமாக எளிய முறையில் நேற்று நடந்தன.

திண்டுக்கல்,

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாக பல்வேறு ஊர்களில் திருமண விழாக்கள் ஆடம்பரமாக நடத்த முடிவு செய்யப்பட்ட நிலையில், ஊரடங்கால் எளிய முறையில் நடைபெறுகின்றனர். அதன்படி, திண்டுக்கல் எம்.வி.எம்.நகரை சேர்ந்தவர் கர்ணன். முன்னாள் ஊராட்சி தலைவர். இவருடைய மகன் அன்புசெல்வன். என்ஜினீயர். இவருக்கும், என்.எஸ்.நகரை சேர்ந்த நர்சு சவுமியாராணி என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இவர்களின் திருமணத்தை வெகுவிமரிசையாக நடத்த இருவீட்டாரும் முடிவு செய்து இருந்தனர். இதற்கிடையே கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் அன்புசெல்வன்-சவுமியாராணி ஆகியோரின் திருமணத்தை நிச்சயித்தபடி, அதேநேரம் மிகவும் எளிமையாக நடத்திட குடும்பத்தினர் முடிவு செய்தனர். அதன்படி நேற்று அவர்களின் திருமணம், மணமகன் வீட்டில் எளிய முறையில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் மணமக்களின் பெற்றோர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் என 10 பேர் மட்டுமே பங்கேற்றனர். மேலும் கிருமிநாசினி மூலம் கைகளை கழுவிய பின்னரே அனைவரும் வீட்டுக்குள் அனுமதிக்கப்பட்டனர். அதோடு மணமக்கள் உள்பட அனைவரும் முக கவசம் அணிந்து கலந்துகொண்டனர்.

தொழில் அதிபர் மகன்

இதேபோல் கொடைக்கானல் நாயுடுபுரத்தை சேர்ந்தவர் முருகன். தொழில் அதிபர். இவருடைய மனைவி ராஜேசுவரி. இவர்களது மகன் தினேஷ்குமார். இவருக்கும் வேடசந்தூர் அருகே உள்ள குளத்துப்பட்டியை சேர்ந்த முருகேசன்-வளர்மதி தம்பதியின் மகள் தேவிகா என்பவருக்கும் திருமணம் செய்வதற்காக கடந்த 4 மாதங்களுக்கு முன்பு நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. மேலும் அவர்களது திருமணம் நேற்று காலை திண்டுக்கல்லில் உள்ள தனியார் திருமண மகாலில் நடைபெறுவதாக இருந்தது. இந்தநிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக தினேஷ்குமார்-தேவிகா திருமணத்தை எளிய முறையில் நடத்த மணமக்கள் குடும்பத்தினர் முடிவு செய்தனர்.

அதன்படி நேற்று தொழில் அதிபர் முருகன் வீட்டு வளாகத்தில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் எளிய முறையில் தினேஷ்குமார்-தேவிகா திருமணம் நடைபெற்றது. இதில் மணமக்களும், உறவினர்களும் முக கவசம் அணிந்து இருந்தனர். மேலும் இந்த திருமண விழாவில் 16 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். அவர்களும் சமூக இடைவெளி விட்டு நின்று மணமக்களை வாழ்த்தினர்.


Next Story