சேலத்தில் நிவாரண பொருட்கள் கேட்டு பொதுமக்கள் போராட்டம்


சேலத்தில் நிவாரண பொருட்கள் கேட்டு பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 4 May 2020 11:00 PM GMT (Updated: 4 May 2020 8:46 PM GMT)

சேலத்தில் நிவாரண பொருட்கள் கேட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம்,

சேலம் அம்மாபேட்டை அருகில் உள்ளது தாதம்பட்டி. இங்குள்ள ரெயில்வே கேட் பகுதியில் ஏராளமான கூலி தொழிலாளர்கள் மற்றும் ஏழை பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் அன்றாட தினக்கூலி வேலைக்கு சென்று வருகிறார்கள்.

ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த 40 நாட்களுக்கு மேலாக யாரும் வேலைக்கு செல்லாமல் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். பெரும்பாலான பொதுமக்களுக்கு ரேஷன் அட்டை இல்லாததால் அரசின் நிவாரண பொருட்கள் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் தாதம்பட்டி காந்திநகரில் வசிக்கும் பொதுமக்கள் தங்களுக்கு நிவாரண பொருட்கள் கேட்டு ரெயில்வே கேட் பகுதிக்கு திரளாக வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தங்களுக்கு ரேஷன் கார்டு இல்லாததால் அரசின் எந்த சலுகையும் , நிவாரண பொருட்கள் ஏதும் கிடைக்கவில்லை என்றும், எனவே நிவாரண பொருட்கள் உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இது குறித்து அறிந்த அம்மாபேட்டை போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை சமாதானப்படுத்தினர். அப்போது, ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்க உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின் நிவாரண பொருட்கள் கிடைக்க வழிவகை செய்வதாக வருவாய்த்துறை அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் சமாதானம் அடைந்து கலைந்து சென்றனர்.

Next Story