தேனி மாவட்டத்தில் கர்ப்பிணி உள்பட 6 பேருக்கு கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பதால் மக்கள் அச்சம்


தேனி மாவட்டத்தில் கர்ப்பிணி உள்பட 6 பேருக்கு கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பதால் மக்கள் அச்சம்
x
தினத்தந்தி 5 May 2020 11:33 PM GMT (Updated: 5 May 2020 11:33 PM GMT)

தேனி மாவட்டத்தில் 9 மாத கர்ப்பிணி உள்பட 6 பேருக்கு கொரோனா பாதிப்பு நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

தேனி,

தேனி மாவட்டத்தில் கடந்த மாதம் 17-ந்தேதி வரை மொத்தம் 43 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருந்தனர். அவர்களில் போடியை சேர்ந்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றவர்கள் சிகிச்சை பெற்று குணமாகி படிப்படியாக வீடு திரும்பினர். கடந்த 1-ந்தேதி நிலவரப்படி சிகிச்சையில் இருந்த அனைவரும் குணமாகி வீடு திரும்பி விட்டனர். இதனால், அன்றைய தினம் தேனி மாவட்டம் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாறியது.

பாதிப்பின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ள மண்டலங்களில் சிவப்பு மண்டலத்தில் இருந்து தேனி மாவட்டம் ஆரஞ்சு மண்டலத்துக்கு முன்னேறியது. அதே நிலை நீடித்தால் பச்சை மண்டலத்துக்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த எதிர்பார்ப்புகளை சுக்குநூறாக நொறுக்கும் வகையில், கடந்த 2-ந்தேதி போடியில் இட்லி விற்பனை செய்து வந்த பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால், கொரோனா தொற்று இல்லாத மாவட்டம் என்ற சிறப்பு முழுமையாக ஒரு நாள் கூட தாக்குப்பிடிக்கவில்லை.

மேலும் 6 பேர்

தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனா பாதிப்பை கண்டறியும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் தேனிக்கு வந்தவர்களுக்கு சளி மாதிரி எடுத்து பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு பரிசோதனைக்கு வரும் கர்ப்பிணிகள் மற்றும் சளி, காய்ச்சலுடன் வரும் நோயாளிகளுக்கும் சளி மாதிரி எடுத்து பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தேனியில் நேற்று மேலும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களில் 2 பேர் பெண்கள், 4 பேர் ஆண்கள். அதன்படி, போடியில் 2 பேர், பெரியகுளம், சின்னமனூர், உத்தமபாளையம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள சேடப்பட்டி ஆகிய இடங்களில் தலா ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

9 மாத கர்ப்பிணி

பாதிக்கப்பட்டவர்களில் பெரியகுளத்தை சேர்ந்த 30 வயது ஆசிரியை ஒருவர். அவர் 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். கடந்த 2-ந்தேதி மருத்துவ பரிசோதனைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு அவர் சென்றார். அங்கு அவருக்கு சளி மாதிரி எடுத்து ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

பாதிக்கப்பட்ட போடியை சேர்ந்த 2 பேருக்கும், ஏற்கனவே பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் போடியை சேர்ந்த பெண் மூலம் பரவியுள்ளது. அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்று இவர்கள் இட்லி வாங்கி வந்ததாக கூறப்படுகிறது. அதன் மூலம் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சின்னமனூரில் பாதிக்கப்பட்டுள்ள நபருக்கு வயது 37. அவர் வாழைக்காய் வியாபாரி. சில நாட்களுக்கு முன்பு இவர் வாழைக்காய்களை ஏற்றிக் கொண்டு புதுச்சேரி சென்று திரும்பி உள்ளார். இந்நிலையில் அவருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது.

லாரி டிரைவர்

உத்தமபாளையத்தை சேர்ந்த 37 வயது பெண் தனது கணவருடன் காஞ்சீபுரத்தில் காய்கறி வியாபாரம் செய்து வந்துள்ளார். கொரோனா பாதிப்பை தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு உத்தமபாளையத்தில் இருந்து சென்ற காய்கறி லாரியில் அந்த பெண் தனது கணவருடன் திரும்பி வந்துள்ளார். வந்த இடத்தில் அவருக்கு காய்ச்சல் இருந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்ற போது அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

ஆண்டிப்பட்டி அருகே உள்ள சேடப்பட்டியை சேர்ந்த பாதிக்கப்பட்ட நபருக்கு வயது 40. லாரி டிரைவரான அவர் சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு சென்று திரும்பி வந்துள்ளார். அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அனைவரும் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் அவர்களோடு தொடர்பில் இருந்தவர்களுக்கும் சளி மாதிரி சேகரிக்கும் பணியில் மருத்துவ குழுவினர் ஈடுபட்டுள்ளனர். மாவட்டத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது மக்களிடம் அச்சத்தை அதிகரித்து உள்ளது.


Next Story