முன்விரோதத்தில் பயங்கரம்: வீட்டுக்குள் புகுந்து வியாபாரி அடித்துக்கொலை - தப்பி ஓடிய 5 பேருக்கு போலீஸ் வலைவீச்சு


முன்விரோதத்தில் பயங்கரம்: வீட்டுக்குள் புகுந்து வியாபாரி அடித்துக்கொலை - தப்பி ஓடிய 5 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 9 May 2020 11:00 PM GMT (Updated: 9 May 2020 9:56 PM GMT)

கும்மிடிப்பூண்டி அருகே முன்விரோதம் காரணமாக வீட்டுக்குள் புகுந்து வியாபாரியை அடித்துக் கொலை செய்த 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி, 

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள காரமணிமேடு கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி(வயது 35). இவர் புறநகர் மின்சார ரெயிலில் பிஸ்கெட் வியாபாரம் செய்து வந்தார். முனுசாமிக்கு திருமணமாகி சூரிய பிரகாஷ்(12) என்ற மகனும், தேவி(10) என்ற மகளும் உள்ளனர். மனைவி பவித்ரா கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காலமாகிவிட்டார்.

குழந்தைகள் 2 பேரும் சிறுபுழல்பேட்டை கிராமத்தில் உள்ள அவர்களது பாட்டி வீட்டில் வசித்து வருகின்றனர். முனுசாமிக்கும், அவரது உறவினரான சஞ்சய்(20) என்ற வாலிபருக்கும் இடையே கடந்த சில நாட்களாக முன்விரோதம் காரணமாக பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு முனுசாமியின் வீட்டிற்குள் சஞ்சய் மற்றும் அவரது நண்பர்களான மாதவன், யுவராஜ் உள்ளிட்ட 5 பேர் புகுந்தனர்.

அதன் பின்னர், அவர்கள் முனுசாமியை தென்னை மட்டையாலும், கற்களாலும் கடுமையாக தாக்கி அடித்துக் கொலை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.

இதனையறிந்த முனுசாமியின் தம்பி குமரேசன்(18) என்பவர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது முனுசாமி இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து சஞ்சய், ஆரம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் முனுசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் தலைமையில் ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை யாளிகள் 5 பேரை வலைவீசி தேடிவருகின்றனர்.

Next Story