துக்க, மருத்துவ காரியங்களுக்கு செல்வோருக்கு 2 மணி நேரத்தில் இ-பாஸ் வழங்கப்படும் கலெக்டர் தகவல்


துக்க, மருத்துவ காரியங்களுக்கு செல்வோருக்கு 2 மணி நேரத்தில் இ-பாஸ் வழங்கப்படும் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 12 May 2020 3:52 AM GMT (Updated: 12 May 2020 3:52 AM GMT)

துக்க, மருத்துவ காரியங்களுக்கு செல்வோருக்கு 2 மணி நேரத்தில் இ-பாஸ் வழங்கப்படும் என கலெக்டர் மெகராஜ் தெரிவித்தார்.

திருச்செங்கோடு,

கொரோனா தாக்கத்தால் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தற்போது 34 வகையான கடைகள் திறப்பதற்கு ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டுள்ளது. இன்னும் முழுமையான தளர்வு கிடைக்காத நிலையில் எந்தெந்த தரப்பினருக்கு தளர்வு செய்வது என்பது குறித்து பல்வேறு தரப்பினரிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் விசைத்தறி உரிமையாளர்களின் கருத்துக்கேட்பு கூட்டம் மாவட்ட கலெக்டர் மெகராஜ் தலைமையில் நடைபெற்றது.

திருச்செங்கோடு உதவி கலெக்டர் அலுவலகத்தில் சமூக இடைவெளியுடன் நடைபெற்ற இந்த கூட்டத்தில் விசைத்தறி உரிமையாளர்கள் பலரும் கலந்துகொண்டனர். சமூக விலகல், முககவசம் அணிதல் மற்றும் கிருமிநாசினிகள் பயன்படுத்தி தக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்து, அரசு கூறும் விதிமுறைகளுக்கு ஏற்ப நடந்துகொள்வதாக விசைத்தறியாளர்கள் உறுதியளித்தனர். விசைத்தறி கூடங்களில் ஒரு ஷிப்டில் பணிபுரிபவர்கள் பெரும்பாலும் கணவன், மனைவியாக இருப்பார்கள். எனவே விசைத்தறி கூடங்கள் இயக்குவதில் எந்த பிரச்சினையும் வராது என்று கலெக்டரிடம் விசைத்தறியாளர்கள் எடுத்துக்கூறினர்.

2 மணி நேரத்தில் வழங்கப்படும்

இதனையடுத்து நிருபர்களை சந்தித்து பேசிய கலெக்டர் கூறியதாவது:- நாளை (இன்று) கலெக்டர் அலுவலகத்தில் வியாபாரிகளுடன் கருத்துகேட்பு கூட்டம் நடைபெற உள்ளது. தமிழக அரசு 34 கடைகளுக்கு விலக்கு அளித்து ஊரடங்கு தளர்வு ஏற்படுத்தியுள்ளது. சமூக விலகல் மற்றும் முககவசம் இல்லாமல் செயல்படும் கடைகள் உடனடியாக பூட்டி ‘சீல்’ வைக்கப்படும் என கூறினார்.

அப்போது இ-பாஸ் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாக நிருபர்கள் கேட்டதற்கு, துக்க காரியங்களுக்கு செல்வோருக்கும், மருத்துவ காரியங்களுக்கு செல்வோருக்கும் இரண்டு மணி நேரத்தில் இ-பாஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் கூறினார். கூட்டத்தில் உதவி கலெக்டர் மணிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டார்.

மோகனூர்

மராட்டிய மாநிலத்தில் இருந்து நாமக்கல் மாவட்டம் மோகனூர் வளையப்பட்டிக்கு வந்த 13 தொழிலாளர்கள் அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதா என மாவட்ட கலெக்டர் மெகராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் இவர்களுக்கு உணவு மற்றும் சுகாதாரமான குடிநீர், சுகாதார துறையினர் மூலம் ஜிங்க் மாத்திரைகள், வைட்டமின்-பி காம்ப்ளக்ஸ் மாத்திரைகள், ஹோமியோபதி மருந்துகள் வழங்கப்பட்டன.

Next Story