விழுப்புரம் மாவட்டத்தில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணிகள் தொடங்கியது


விழுப்புரம் மாவட்டத்தில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணிகள் தொடங்கியது
x
தினத்தந்தி 15 May 2020 1:23 AM GMT (Updated: 15 May 2020 1:23 AM GMT)

ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணிகள் தொடங்கியுள்ளது. இப்பணியில் 47,700 பேர் ஈடுபட்டு வருகின்றனர்.

விழுப்புரம்,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இந்த ஊரடங்கால் அனைத்து பணிகளும் பாதிக்கப்பட்டன. கட்டிட பணிகள் முதல் அனைத்து வேலைகளும் நிறுத்தப்பட்டன.

ஆனால் மக்களின் அத்தியாவசிய தேவைகளான காய்கறி கடைகள், மளிகை கடைகள், மருந்துக்கடைகள் மட்டும் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் காய்கறி கடைகள், மளிகை கடைகள் முன்பு காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை திறக்கப்பட்டிருந்த நிலையில் ஊரடங்கில் சில தளர்வுகள் செய்யப்பட்டதை தொடர்ந்து தற்போது காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட்டு வருகிறது.

விவசாய பணிகள்

அதுபோல் ஊரடங்கு தளர்த்தப்பட்டதன் காரணமாக விவசாய பணிகள், கட்டிட பணிகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. அந்த வகையில் கிராமப்புறங்களில் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் செயல்படுத்தப்பட்டு வந்த மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து தமிழக அரசும், இத்திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட்டுள்ளதன் அடிப்படையில் பல்வேறு மாவட்டங்களில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்திலும் தற்போது இத்திட்டப்பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.

13 ஒன்றியங்களில்

மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் 688 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த 13 ஒன்றியங்களிலும் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் ஈடுபட்டுள்ன தொழிலாளர்கள் அனைவரும் முக கவசம் அணிந்தவாறும், சமூக இடைவெளியை கடைபிடித்தபடியும் பணிகளை மேற்கொண்டனர்.

விழுப்புரம் அருகே காணை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வைலாமூரில் பம்பை ஆற்றுக்கு நீர்வரத்து வரக்கூடிய பாசன வாய்க்காலை தூர்வாரும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இவர்கள் அனைவரும் முக கவசம் அணிந்துகொண்டும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் பணியை மேற்கொண்டனர். இதுபோல் மாவட்டம் முழுவதும் கொரோனா பாதிப்பு இல்லாத பகுதிகளில் தொழிலாளர்கள் மும்முரமாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

47,700 பேர்

இதுகுறித்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மகேந்திரனிடம் கேட்டபோது அவர் கூறுகையில், விழுப்புரம் மாவட்டத்தில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் கடந்த சில நாட்களாக ஏரி, குளம், பாசன வாய்க்கால் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முன்பு 100 பேர் வேலை செய்த இடத்தில் தற்போது 50 பேர் மூலமாகவே பணிகள் நடந்து வருகிறது. இப்பணியில் 47 ஆயிரத்து 700 பேர் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொருவரும் கட்டாயம் முக கவசம் அணிந்து கொண்டுதான் பணியில் ஈடுபட வேண்டும் என்றும், 2 மீட்டர் இடைவெளியை பின்பற்றி பணியை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடிக்கடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர் என்றார்.

Next Story