அபராதம் வசூலித்த அதிகாரிகள் மீது தாக்குதல்: குற்றவாளியை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையம் முற்றுகை


அபராதம் வசூலித்த அதிகாரிகள் மீது தாக்குதல்: குற்றவாளியை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையம் முற்றுகை
x
தினத்தந்தி 15 May 2020 2:00 AM GMT (Updated: 15 May 2020 2:00 AM GMT)

முககவசம் அணியாததற்கு அபராதம் கேட்ட அதிகாரியை தாக்கியவரை கைது செய்யக்கோரி பெரியகடை போலீஸ் நிலையத்தை நகராட்சி ஊழியர்கள் முற்றுகையிட்டனர்.

புதுச்சேரி,

புதுவை மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. ஓட்டல்கள், கடைகளை பல்வேறு நிபந்தனைகளுடன் திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. இங்கு வேலை செய்பவர்கள் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அணியாதவர்களிடம் ரூ.100 அபராதம் வசூலிக்கும் அதிகாரம் நகராட்சிக்கு வழங்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் புதுச்சேரி காந்திவீதியில் நகராட்சி அதிகாரிகள் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர். அப்போது அங்குள்ள ஒரு ஓட்டலில் ஊழியர்கள் முக கவசம் அணியாமல் பணிபுரிந்தது தெரியவந்தது. உடனே நகராட்சி அதிகாரிகள், அந்த நபர்களை எச்சரித்து, அபராதம் செலுத்தும்படி கூறினர். ஆனால் ஓட்டல் ஊழியர்கள் அபராதம் செலுத்த மறுத்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

போலீஸ் நிலையம் முற்றுகை

அப்போது ஓட்டலில் பணிபுரிந்த மூன்று பேர் அபராதம் கேட்ட நகராட்சி அதிகாரிகளை திட்டி, தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் இதுகுறித்து பெரியகடை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர். மற்றொருவரை கைது செய்யவில்லை.

இதனை அறிந்த நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் நேற்று காலை பெரியகடை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது நகராட்சி அதிகாரிகளை தாக்கிய 3-வது நபரையும் கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். உடனே போலீசார் அவரை கைது செய்வதாக உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story