சேலத்தில் பரபரப்பு போதை ஊசி போட்ட சிறுவன் சாவு நண்பர்களிடம் போலீசார் விசாரணை


சேலத்தில் பரபரப்பு போதை ஊசி போட்ட சிறுவன் சாவு நண்பர்களிடம் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 17 May 2020 3:42 AM GMT (Updated: 17 May 2020 3:42 AM GMT)

சேலத்தில் போதை ஊசி போட்ட சிறுவன் உயிரிழந்தான். இது தொடர்பாக அவனது நண்பர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சேலம்,

சேலம் அன்னதானப்பட்டி வள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர் கருப்பண்ணன். இவருடைய மகன் அஜித் குமார் (வயது 17). இவன் வெள்ளிப்பட்டறையில் வேலை செய்து வந்தான். இந்த நிலையில் நேற்று முன்தினம் அஜித்குமார் தனது நண்பர்கள் சிலருடன் அருகே உள்ள கரட்டு பகுதிக்கு சென்றான்.

அங்கு அவன் கையில் போதை ஊசி போட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து மயக்கம் அடைந்த அவனை நண்பர்கள் வீட்டுக்கு அழைத்து வந்து விட்டுவிட்டு சென்று விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் ஆம்புலன்ஸ் வருவதற்குள் அஜித்குமார் பரிதாபமாக இறந்தான்.

நண்பர்களிடம் விசாரணை

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அன்னதானப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் சிறுவனின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவன் இறந்தது தொடர்பாக அவனுடைய நண்பர்கள் 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

போதை மாத்திரை

இது குறித்து போலீசார் கூறும்போது, “இறந்துபோன அஜித்குமார் கடந்த 6 மாத காலமாக போதைக்காக சொலுசன், தின்னர், தூக்கமாத்திரை, போதை ஊசி போன்றவற்றை பயன்படுத்தி வந்ததாக தெரியவந்தது.

சம்பவத்தன்று அஜித்குமார் நண்பர்களுடன் சென்று போதை மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து பின்னர் ஊசி மூலம் கை நரம்பில் ஏற்றியுள்ளான். இதில் மயக்கம் அடைந்த அவனை வீட்டுக்கு நண்பர்கள் அழைத்து வந்தனர். அங்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு அவன் இறந்தது தெரியவந்தது. சிறுவன் போதை ஊசி போட்டுக் கொண்டதால் இறந்தானா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் தெரியவரும்” என்றார்கள்.

மேலும் சிறுவன் போதை மாத்திரை மற்றும் ஊசியை எங்கு வாங்கினான்? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். போதை ஊசி போட்ட சிறுவன் இறந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story