திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 7 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 128-ஆக உயர்வு


திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 7 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 128-ஆக உயர்வு
x
தினத்தந்தி 26 Jun 2020 2:50 AM GMT (Updated: 26 Jun 2020 2:50 AM GMT)

திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 128-ஆக உயர்ந்துள்ளது.

திருப்பூர்,

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரசால் இந்தியாவில் கடும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு கட்ட ஊரடங்கும் விதிக்கப்பட்டுள்ளது. தற்போது 5-வது கட்ட ஊரடங்கும் அமலில் உள்ளது. இருப்பினும் வைரஸ் கட்டுக்கடங்காமல் இருந்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் அதிகரிப்பு நாள் நாள் உயர்ந்து கொண்டே வருகிறது.

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் இருந்து வந்தது. ஆனால் கடந்த 2 வாரமாக வெளிநாடு, வெளிமாநிலம், வெளிமாவட்டம் என பல்வேறு பகுதிகளில் இருந்து வந்தவர்கள் மூலம் கொரோனா பரவியுள்ளது. இதனால் மாவட்டத்தில் தடுப்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக வெளிபகுதிகளில் இருந்து திருப்பூர் மாவட்டத்திற்குள் வருகிறவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

7 பேருக்கு கொரோனா

இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இது குறித்து திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர்கள் கூறியதாவது:-

தாராபுரம் நகராட்சியில் பணியாற்றும் சி.எஸ்.ஐ. நகரை சேர்ந்த 51 வயது பெண் ஊழியர் மற்றும் ஒப்பந்ததாரரான 55 வயதுடைய அவரது கணவர், மேலும், நகராட்சி அலுவலகத்தில் பணியாற்றி வந்த சக்திநகரை சேர்ந்த 39 வயது ஆண், ஜவகர்நகரை சேர்ந்த 44 வயது பெண், பிக்பஜார் தெருவை சேர்ந்த 28 வயது ஆண் ஆகிய 5 பேருக்கும் நேற்று முன்தினம் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து நகராட்சி அலுவலகமும் மூடப்பட்டது. இதன் பின்னர் இந்த 5 பேரும் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர். இவர்களின் பாதிப்பு கணக்கு நேற்று முன்தினம் திருப்பூர் மாவட்ட கணக்கில் சென்னை சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்படும் பட்டியலில் குறிப்பிடப்படாமல் இருந்தது.

இந்நிலையில் நேற்று திருப்பூர் நாராயணன்நகரை சேர்ந்த 35 வயது ஆண் மற்றும் பாண்டியன்நகரை சேர்ந்த 41 வயது ஆண் ஆகிய 2 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில் பாண்டியன்நகரை சேர்ந்தவர் ராஜபாளையத்திற்கு சென்று வந்தவர். நாராயணன்நகரை சேர்ந்தவர் கரூர் மாவட்டம் பல்லப்பட்டிக்கு சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் 2 பேருக்கும் சந்தேகத்தின் பேரில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா இருப்பது தெரியவந்தது.

இதன் காரணமாக ஏற்கனவே குறிப்பிடப்படாமல் இருந்த தாராபுரத்தை சேர்ந்த 5 பேரின் பாதிப்பு கணக்கு மற்றும் நேற்று பாதிக்கப்பட்ட 2 பேரையும் சேர்த்து நேற்று திருப்பூர் மாவட்டத்தில் 7 பேருக்கு கொரோனா என சென்னை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள பட்டியலில் குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 128-ஆக உயர்ந்துள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story