கொள்ளிடம் கதவணை கட்டுமான பணி ஜனவரி மாதத்திற்குள் முடிவடையும் எடப்பாடி பழனிசாமி தகவல்


கொள்ளிடம் கதவணை கட்டுமான பணி ஜனவரி மாதத்திற்குள் முடிவடையும் எடப்பாடி பழனிசாமி தகவல்
x
தினத்தந்தி 26 Jun 2020 11:22 PM GMT (Updated: 26 Jun 2020 11:22 PM GMT)

கொள்ளிடம் கதவணை கட்டுமான பணி வருகிற ஜனவரி மாதத்திற்குள் முடிவடையும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

திருச்சி,

கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வு கூட்டம் முடிவடைந்த பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுலா மாளிகைக்கு சென்று மதிய உணவு அருந்தினார். அதன் பின்னர் அங்கிருந்து முக்கொம்பு மேலணைக்கு புறப்பட்டு சென்றார். முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே நடந்துவரும் புதிய கதவணை கட்டுமான பணியை எடப்பாடி பழனிசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் வளர்மதி, சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், உணவு துறை அமைச்சர் காமராஜ், போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு ஆகியோர் உடன் இருந்தனர்.

ஆய்விற்கு பின்னர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜனவரிக்குள் முடிவடையும்

132 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கொள்ளிடம் கதவணையின் சில மதகுகள் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு 22-ந் தேதி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. உடனடியாக அங்கு ரூ.39 கோடியில் சீரமைப்பு பணிகள் நடந்தன. தற்போது ரூ.387 கோடியில் புதிய கதவணை கட்டுமான பணி நடந்து வருகிறது. இதுவரை 40 சதவீத பணிகள் முடிந்து உள்ளன. வருகிற ஜனவரி மாதத்திற்குள் கட்டுமான பணி முழுமையாக நிறைவடையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பங்கேற்றவர்கள்

முக்கொம்பு நிகழ்ச்சியில் திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ப.குமார், புறநகர் மாவட்ட செயலாளர் டி.ரத்தினவேல், ஆறுமுகம் எம்.எல்.ஏ, முன்னாள் அமைச்சர்கள் கு.ப.கிருஷ்ணன், பரஞ்சோதி, ‘ஆவின்’ தலைவர் கார்த்திகேயன், திருச்சி நகர கூட்டுறவு வங்கித் தலைவர் பத்மநாதன், துறையூர் ஒன்றிய செயலாளர் சேனை பெ.செல்வம் மற்றும் திருச்சி மாநகர் மாவட்டத்தை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முக்கொம்பு ஆய்விற்கு பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலத்திற்கு புறப்பட்டு சென்றார். அவரை அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் வழியனுப்பி வைத்தனர்.

Next Story