கொரோனா தொற்று பரவுவதால் ஒரத்தநாடு அருகே டாஸ்மாக் கடை தற்காலிகமாக மூடப்பட்டது


கொரோனா தொற்று பரவுவதால் ஒரத்தநாடு அருகே டாஸ்மாக் கடை தற்காலிகமாக மூடப்பட்டது
x
தினத்தந்தி 28 Jun 2020 1:37 AM GMT (Updated: 28 Jun 2020 1:37 AM GMT)

கொரோனா தொற்று பரவுவதால் ஒரத்தநாடு அருகே டாஸ்மாக் கடை தற்காலிகமாக மூடப்பட்டது. கிராம மக்கள் எதிர்ப்பை தொடர்ந்து அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.

ஒரத்தநாடு,

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்துள்ள தொண்டராம்பட்டு கிழக்கு பகுதியை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு அந்த கிராமத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை தற்காலிகமாக மூட வேண்டும் எனக்கூறி அந்த பகுதியை சேர்ந்த 50 பெண்கள் உள்பட கிராம மக்கள் நேற்று சம்மந்தப்பட்ட மதுபான கடைக்கு சென்று ஊழியர்களிடம் கடையை திறக்ககூடாது என்று கோரிக்கை விடுத்தனர்.

தற்காலிகமாக மூடப்பட்டது

இதுபற்றிய தகவல் அறிந்ததும் பாப்பாநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகரெத்தினம், ஒரத்தநாடு தாசில்தார் அருள்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இந்த பகுதியை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மேலும் தொற்று பரவுவதை தடுக்கும் பொருட்டு டாஸ்மாக் கடையை தற்காலிகமாக மூடவேண்டும் என்று கிராம மக்கள், அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர்.

இதனை தொடர்ந்து அதிகாரிகள் சம்மந்தப்பட்ட டாஸ்மாக் கடையை மூடுமாறு ஊழியர்களை அறிவுறுத்தினர். மேலும் இதுகுறித்து உயர் அதிகாரிகளின் ஆலோசனை பெற்று டாஸ்மாக் கடை திறக்கப்படும் என்று கிராம மக்களிடம் அதிகாரிகள் கூறினர். இதனை தொடர்ந்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த டாஸ்மாக் கடை நேற்று முழுவதுமாக மூடப்பட்டது.

இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story