நாமக்கல் மாவட்டத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேருக்கு கொரோனா?


நாமக்கல் மாவட்டத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேருக்கு கொரோனா?
x
தினத்தந்தி 29 Jun 2020 2:31 AM GMT (Updated: 29 Jun 2020 2:31 AM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

நாமக்கல்,

சேலம் தனியார் ஆஸ்பத்திரியில் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த ராசிபுரத்தை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு காலமானார். இவரது இறுதி சடங்கில் பங்கேற்க டாக்டர்களான அவரது மகனும், மருமகளும் சென்னையில் இருந்து சேலம் வந்தனர். அதேபோல் மகளும், மருமகனும் பெங்களூருவில் இருந்து வந்து உள்ளனர். பின்னர் அவர்களுக்கு சேலத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதற்கிடையே உடல்நலக்குறைவால் இறந்த பெண்ணின் இறுதிச்சடங்கு நேற்று முன்தினம் ராசிபுரத்தில் நடந்தது. இந்த நிலையில் அவர்கள் 4 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் 4 பேரும் நேற்று சேலம் தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதற்கிடையே முன்எச்சரிக்கை நடவடிக்கையாக ராசிபுரம் சிவானந்தா சாலைக்கு ‘சீல்’ வைத்ததுடன், அப்பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

இருப்பினும் மாநில சுகாதாரத்துறை இவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதை இன்னும் உறுதி செய்யவில்லை. அவர்களது பெயர் பட்டியல் இன்னும் நாமக்கல் மாவட்ட எண்ணிக்கையில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சப்-இன்ஸ்பெக்டருக்கு கொரோனா

இதேபோல் பள்ளிபாளையம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் 30 வயது நிரம்பிய சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். அவர் நேற்று பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சென்றார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனைக்கு உமிழ்நீர் மற்றும் சளி மாதிரி எடுக்கப்பட்டு நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது அவருக்கு கொரோனா இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து நேற்று பள்ளிபாளையம் போலீஸ் நிலையத்தில் சுகாதாரத்துறையினர் கிமினிநாசினி மருந்து தெளித்தனர். மேலும் போலீஸ் நிலையத்திற்கு செல்லும் சாலையை தடுப்புகள் உதவியுடன் மூடிவிட்டனர்.

இதற்கிடையே நேற்று மாலை திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகம் பள்ளிபாளையம் போலீஸ் நிலையம் வந்தார். அவர் இன்று (திங்கட்கிழமை) பள்ளிபாளையம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள உத்தரவிட்டார். கொரோனா இருப்பதாக கூறப்படும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கடந்த வாரம் தான் மங்களபுரம் போலீஸ் நிலையத்தில் இருந்து மாறுதலாகி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேருக்கு கொரோனா இருப்பதாக தகவல் வெளியாகி இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. 

Next Story