செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் கொரோனாவால் 501 பேர் பாதிப்பு


செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் கொரோனாவால் 501 பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 26 July 2020 10:36 PM GMT (Updated: 26 July 2020 10:36 PM GMT)

செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவில் நேற்று ஒரேநாளில் 501 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை தாண்டியது.

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள நெடுங்குன்றம் ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்த 52 வயது ஆண், ஆலப்பாக்கம் எஸ்.எஸ்.எம். நகர் பகுதியை சேர்ந்த 66 வயது மூதாட்டி, ரத்தினமங்கலம் பகுதியை சேர்ந்த 25 வயது வாலிபர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

வண்டலூர் சிங்காரத் தோட்டம் பகுதியில் வசிக்கும் 54 வயது பெண், ஊரப்பாக்கம் பிரியா நகர் பகுதியை சேர்ந்த 26 வயது வாலிபர், முத்துவேல் நகர் பகுதியை சேர்ந்த 32 வயது பெண், 31 வயது வாலிபர், 42 வயது ஆண் ஆகியோருக்கு தொற்று ஏற்பட்டது.

நந்திவரம்கூடுவாஞ்சேரி பேரூராட்சி பகுதியில் உள்ள கே.கே.நகர் 3-வது மெயின் ரோடு பகுதியை சேர்ந்த 71 வயது மூதாட்டி, வீரபாகு நகரை சேர்ந்த 58 வயது பெண் ஆகியோருக்கும், மறைமலை நகராட்சியில் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த 27 வயது வாலிபர், காட்டாங்கொளத்தூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த 27 வயது வாலிபர், கவிமணி தெருவை சேர்ந்த 24 வயது வாலிபர் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுடன் செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவில் நேற்று ஒரே நாளில் 501 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 266 ஆக உயர்ந்து உள்ளது. இவர்களில் 8,898 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 227 ஆக உயர்ந்தது. 3,141 பேர் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் நகராட்சி பகுதியில் நேற்று கற்குழாய் தெருவில் 2 பேரும், நேதாஜி சாலை மற்றும் என்.ஜி.ஓ. காலனியில் ஒருவர் என 4 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல கடம்பத்தூர் ஒன்றியத்தில் உள்ள மணவாளநகரில் 8 பேருக்கும், கீழ்நல்லாத்தூர் மற்றும் மேல்நல்லாத்தூரில் தலா ஒருவர் என 10 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 480 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரையில் திருவள்ளூர் மாவட்டத்தில் 11 ஆயிரத்து 876 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அவர்களில் 7,897 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 3,771 பேர் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 9 பேர் இறந்ததையடுத்து, இதுவரை 208 பேர் உயிரிழந்துள்ளனர்.

காஞ்சீபுரம்

காஞ்சீபுரம் மாவட்டம் சோமங்கலம் பகுதியை சேர்ந்த 36 வயது ஆண், 26 வயது பெண், 25 வயது வாலிபர், 43 வயது ஆண், வைப்பூர் ஊராட்சி காரணைத்தாங்கல் பகுதியை சேர்ந்த 22, 23 மற்றும் 21 வயது வாலிபர்கள் ஆகியோர் கொரோனா தொற்றுக்குள்ளாயினர்.

உமையாள் பரணஞ்சேரி பகுதியை சேர்ந்த 55 வயது ஆண், 50 வயது பெண், படப்பை ஆத்தனஞ்சேரி பகுதியை சேர்ந்த 30 வயது வாலிபர், படப்பை பகுதியை சேர்ந்த 25 வயது வாலிபர், 20 வயது இளம்பெண், 24, 21, 24 வயதுவாலிபர்கள், மாடம்பாக்கம் ஊராட்சி பகுதியை சேர்ந்த 17 வயது ஆண் ஆகியோருக்கு பரிசோதனை செய்ததில், கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இவர்களோடு சேர்த்து நேற்று ஒரே நாளில் 363 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 161 ஆக உயர்ந்து உள்ளது.

இவர்களில் 4,432 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். 2,640 பேர் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 89 ஆக உயர்ந்தது.

Next Story