ஸ்ரீபெரும்புதூர் அருகே காரில் மது பாட்டில்கள் கடத்தல்; 2 பேர் கைது


ஸ்ரீபெரும்புதூர் அருகே காரில் மது பாட்டில்கள் கடத்தல்; 2 பேர் கைது
x
தினத்தந்தி 3 Aug 2020 11:27 PM GMT (Updated: 3 Aug 2020 11:27 PM GMT)

ஸ்ரீபெரும்புதூர் அருகே காரில் மது பாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

வாலாஜாபாத்,

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் காஞ்சீபுரம் மதுவிலக்கு அமல் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு அருள்மணி தலைமையில் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் மற்றும் போலீசார் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த வல்லக்கோட்டை கூட்டு சாலை சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படியாக வந்த காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அதில் காஞ்சீபுரம் அருகே செயல்பட்டு வரும் மதுக்கடையில் இருந்து சென்னைக்கு மது பாட்டில்கள் கடத்திச்செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் காரில் மது பாட்டில்களை கடத்தியதாக வளசரவாக்கத்தை சேர்ந்த வேலாயுதம்(வயது 44), முகப்பேர் மேற்கு பகுதியை சேர்ந்த ராஜா (39) ஆகியோரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 26 பெட்டிகளில் இருந்த 1,344 மதுபாட்டிலகளையும், கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் போலீசார் கைப்பற்றினர்.

Next Story