தென்காசி அருகே மின்கம்பி அறுந்து விழுந்ததில் என்ஜினீயரிங் மாணவர் மின்சாரம் தாக்கி சாவு


தென்காசி அருகே மின்கம்பி அறுந்து விழுந்ததில் என்ஜினீயரிங் மாணவர் மின்சாரம் தாக்கி சாவு
x
தினத்தந்தி 5 Aug 2020 2:03 AM GMT (Updated: 5 Aug 2020 2:03 AM GMT)

தென்காசி அருகே மின்கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி என்ஜினீயரிங் மாணவர் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து இழப்பீடு வழங்கக்கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தென்காசி,

தென்காசி அருகே உள்ள பண்பொழியை அடுத்த கரிசல்குடியிருப்பு பஜனைமட தெருவை சேர்ந்தவர் மாடசாமி மகன் காளிராஜ் (வயது 21). இவர் நெல்லையில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் கப்பல் பிரிவில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று காலை இவர் தனது உறவினருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் உள்ள மோட்டார் பம்புசெட்டில் குளிக்க சென்றார். அப்போது மழை பெய்து கொண்டிருந்ததால் அவர் தனது உடைகளை மறைவாக ஒரு இடத்தில் வைத்தார்.

மின்சாரம் தாக்கி சாவு

பின்னர் அவர் குளித்து விட்டு, மீண்டும் உடைகளை எடுக்க வந்தார். அப்போது பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் திடீரென்று மின்கம்பி அறுந்து காளிராஜ் மீது விழுந்தது. இதில் அவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், அச்சன்புதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

உறவினர்கள் போராட்டம்

இந்த நிலையில் அவரது உறவினர்கள் நேற்று மதியம் தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர். அங்கு அவர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், ‘காளிராஜ் இறப்புக்கு மின்வாரியம் தான் காரணம். எனவே, இழப்பீடாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். இதற்கு அதிகாரிகள் சம்மதித்தால் தான் உடலை வாங்குவோம்‘ என்று கூறினர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த போராட்டம் மாலை 6 மணி வரை நடைபெற்றது.

பின்னர் காளிராஜின் தந்தை மாடசாமி மற்றும் சிலர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று கலெக்டர் அருண்சுந்தர் தயாளனிடம் இழப்பீடு வழங்கக்கோரி கோரிக்கை விடுத்தனர். அப்போது அவர், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து அவர்கள், ‘அரசு இழப்பீடு தருவதாக கூறினால் தான் உடலை வாங்குவோம். இல்லாவிட்டால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம்‘ என்று கூறிவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மின்சாரம் தாக்கி என்ஜினீயரிங் மாணவர் இறந்ததும், இழப்பீடு வழங்கக்கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதும் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story