வீடியோ காலில் ஆபாசமாக பேசிய பெண்ணிடம் ரூ.37 ஆயிரத்தை பறிகொடுத்த வாலிபர்


வீடியோ காலில் ஆபாசமாக பேசிய பெண்ணிடம் ரூ.37 ஆயிரத்தை பறிகொடுத்த வாலிபர்
x
தினத்தந்தி 30 Aug 2020 11:52 PM GMT (Updated: 30 Aug 2020 11:52 PM GMT)

வீடியோ காலில் ஆபாசமாக பேசிய பெண்ணிடம் வாலிபர் ஒருவர் ரூ.37 ஆயிரத்தை பறிகொடுத்தார்.

வசாய்,

தானே மாவட்டம் பயந்தரை சேர்ந்த 25 வயது வாலிபர் ஒருவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்தபடி வேலை செய்து வருகிறார். அண்மையில் அவருக்கு வாட்ஸ்அப் அழைப்பு வந்தது. இதனை எடுத்து பேசிய போது எதிர்முனையில் பெண் ஒருவர் இனிக்க இனிக்க பேசினார்.

பின்னர் சில நாட்களாக அப்பெண் வாலிபரிடம் ஆபாசமாக பேச்சு கொடுத்தார். இதற்கு வாலிபர் மயங்கிய நிலையில், ஆடையின்றி வீடியோ காலில் பேசுமாறு அப்பெண் கேட்டுக்கொண்டார். இதனால் உணர்ச்சி வசப்பட்ட வாலிபர் வீடியோ காலில் ஆடையின்றி அப்பெண்ணிற்கு அழைப்பு விடுத்து பேசினார்.

சில மணி நேரத்தில் அப்பெண் வாலிபரை தொடர்பு கொண்டு உங்களது ஆபாச வீடியோவை சமூக வலைதளத்தில் பரப்பி விடுவதாகவும், அவ்வாறு செய்யாமல் இருக்க ரூ.50 ஆயிரம் தர வேண்டும் என்றும் மிரட்டல் தொணியில் பேசினார். மேலும் ஆபாச வீடியோவை அவருக்கு அனுப்பி வைத்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த வாலிபர் அப்பெண்ணை எச்சரித்தார். அப்போது எதிர்முனையில் பேசிய ஆசாமி ஒருவர் தான் சி.பி.ஐ. போலீஸ் அதிகாரி என மிரட்டி உள்ளார். இதனால் பயந்து போன வாலிபர் அவர் தெரிவித்த வங்கி கணக்கிற்கு ரூ.37 ஆயிரத்தை அனுப்பி உள்ளார்.

சில நாள் கழித்து அதே ஆசாமி மீண்டும் பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் மனஉளைச்சல் அடைந்த வாலிபர், உத்தன் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் அடையாளம் தெரியாத பெண் மற்றும் ஆசாமி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story