போதைப்பொருள் விவகாரத்தில் மேலும் ஒரு நடிகைக்கு தொடர்பு?


போதைப்பொருள் விவகாரத்தில் மேலும் ஒரு நடிகைக்கு தொடர்பு?
x
தினத்தந்தி 13 Sep 2020 10:12 PM GMT (Updated: 13 Sep 2020 10:12 PM GMT)

போதைப்பொருள் விவகாரத்தில் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி கைது செய்யப்பட்டு உள்ள நிலையில், மேலும் ஒரு நடிகைக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்து உள்ளது.

பெங்களூரு,

பெங்களூருவில் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை விற்பனை செய்ததாக கன்னட சின்னத்திரை நடிகையான அனிகா, அவரது கூட்டாளிகள் ரவீந்திரன், அனூப் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில் அனிகாவிடம் நடத்திய விசாரணையில் அவர் கன்னட திரை உலகினருக்கு போதைப்பொருட்கள் விற்றது தெரியவந்தது. இந்த நிலையில் போதைப்பொருட்களை பயன்படுத்தியது மற்றும் போதைப்பொருள் விற்பனை செய்யும் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக கன்னட நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக இலங்கையில் உள்ள கேளிக்கை விடுதியின் கர்நாடக ஏஜெண்டாக இருக்கும் சேக் பாசில் என்பவரை போலீசார் தேடிவருகின்றனர். இந்த நிலையில் போதைப்பொருள் விவகாரத்தில் மேலும் ஒரு நடிகைக்கு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்து உள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

நடிகை அன்ட்ரிதா ராய்

கன்னடத்தில் பிரபல நடிகையாக இருப்பவர் அன்ட்ரிதா ராய். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்ட ஒரு வீடியோவில் நான் இலங்கைக்கு செல்கிறேன். அங்கு நடைபெறும் விருந்து நிகழ்ச்சிக்கு என்னை அழைத்த சேக் பாசிலுக்கு நன்றி என்று கூறி இருந்தார். மேலும் சேக் பாசிலுடன் சேர்ந்து சூதாட்ட விடுதியில் வைத்து அன்ட்ரிதா ராய் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளன. இதனால் போதைப்பொருள் விவகாரத்தில் அன்ட்ரிதா ராய்க்கு தொடர்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.

ஆனால் இதை அன்ட்ரிதா ராய் மறுத்து உள்ளார். இதுகுறித்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது கூறியதாவது:-

விருந்து நிகழ்ச்சியில்...

எனது மேலாளர் ஒப்பந்தம் செய்த விளம்பர படம் ஒன்றில் நடிக்கவே இலங்கைக்கு சென்று இருந்தேன். பின்னர் அங்கு உள்ள சூதாட்ட விடுதிக்கு சென்று இருந்தேன். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தேன். அங்கு வைத்து நான் சேக் பாசிலை சந்திக்கவே இல்லை. எனது நண்பர் அர்பாஸ்கானின் பிறந்தநாள் பெங்களூருவில் நடந்தது.

பிறந்தநாளையொட்டி நடந்த விருந்து நிகழ்ச்சியில் சேக் பாசில் கலந்து கொண்டார்.

சந்தித்ததே இல்லை

விருந்தில் புகைப்படம் எடுத்த போது அந்த புகைப்படத்தில் எனது அருகே சேக் பாசிலும் இருந்தார். நான் அவரை சந்தித்ததே இல்லை. நான் அந்த விருந்தில் 20 நிமிடங்கள் தான் கலந்து கொண்டேன். எனது அருகே சேக் பாசில் இருப்பது போன்ற புகைப்படத்தை எடுத்தவரிடம் சென்று ஏன் இப்படி புகைப்படம் எடுத்தீர்கள் என்று கேட்க முடியுமா?

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story