கிருஷ்ணராயபுரம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கீதாவுக்கு கொரோனா வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார்


கிருஷ்ணராயபுரம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கீதாவுக்கு கொரோனா வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார்
x
தினத்தந்தி 15 Sep 2020 1:30 AM GMT (Updated: 15 Sep 2020 1:30 AM GMT)

கிருஷ்ணராயபுரம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கீதாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.

கரூர்,

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. பொதுமக்கள், மருத்துவர்கள், சுகாதாரத்துறை பணியாளர்கள், சினிமா பிரபலங்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் என்று அனைவரும் நோய் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். முதலில்தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கொரோனா பாதிப்புக்கு ஆளானார்கள். பின்னர்அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

சென்னையை சேர்ந்ததி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் கொரோனாவின் கோரப்பசிக்கு பலியானார். தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் சட்டசபை கூடுவதாக அறிவிக்கப்பட்டதையடுத்து சட்டசபை கூட்டத்தில் பங்கேற்கும் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டிருந்தது.

எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா

இதையடுத்து சட்டமன்ற கூட்டத்தில் பங்கேற்பதற்காக கரூர் மாவட்டத்தில் உள்ள கரூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வும், அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், அரவக்குறிச்சி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜி, குளித்தலை தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ராமர், கிருஷ்ணராயபுரம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கீதா ஆகிய 4 பேரும் கடந்த 11-ந் தேதி கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர். இதில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என தெரியவந்தது. இந்தநிலையில், கடந்த 12-ந்தேதி கிருஷ்ணராயபுரம் தொகுதி எம்.எல்.ஏ. கீதாவின் உதவியாளர் மற்றும் கார் டிரைவர் ஆகியோருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் அவர்களுக்கு நோய்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் கீதா எம்.எல்.ஏ. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று சென்னையில் நடைபெற்ற சட்டசபை கூட்டத்திற்கு செல்லாமல் இருந்தார். இதனால் நேற்று காலை மீண்டும் கீதா எம்.எல்.ஏ., கரூர் அரசு மருத்துவக்கல்லூரியில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று மாலை உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து நெரூரில் உள்ள தனது வீட்டில் மருத்துவரின் அறிவுறுத்தலின் பேரில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார்.

Next Story