திருப்பூர் மாவட்டத்தில் 192 பேருக்கு கொரோனா சிகிச்சை பலனின்றி பெண் பலி


திருப்பூர் மாவட்டத்தில் 192 பேருக்கு கொரோனா சிகிச்சை பலனின்றி பெண் பலி
x
தினத்தந்தி 15 Sep 2020 2:14 AM GMT (Updated: 15 Sep 2020 2:14 AM GMT)

திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 192 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. சிகிச்சை பலனின்றி பெண் பலியானார்.

திருப்பூர்,

தமிழகத்தில் தினமும் கொரோனாவின் பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டு வந்து கொண்டிருக்கிறது. தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், பாதிப்பு குறைந்தபாடில்லை. அந்த அளவிற்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது.

திருப்பூர் மாவட்டத்திலும் தற்போது கொரோனா கோரதாண்டம் ஆடி வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 5 ஆயிரத்து 752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இதில் திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் 192 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இவர்கள் அனைவருக்கும் தற்போது மேல்சிகிச்சை அளிக்கப்பட்டு வந்து கொண்டிருக்கிறது.

4 ஆயிரத்து 938 ஆக உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று பாதிக்கப்பட்டவர்களையும் சேர்ந்த தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 938 ஆக உயர்ந்துள்ளது. 5 ஆயிரத்தையும் நெருங்கி விட்டது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பச்சை மண்டலமாக இருந்த திருப்பூர், தற்போது இந்த அளவிற்கு பாதிப்பை சந்தித்துள்ளது. கடந்த ஒரு வாரமாகவே பாதிப்பு எண்ணிக்கை 300 அல்லது 200-ஐ நெருங்கியபடியே இருக்கிறது.

எனவே மாவட்ட நிர்வாகம் இதனை கட்டுப்படுத்த தனிக்கவனம் செலுத்த வேண்டும். காலம் தாழ்த்தாமல் கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

மேலும் ஒரு பெண் பலி

திருப்பூரை சேர்ந்த 76 வயது பெண்ணுக்கு சளி மற்றும் காய்ச்சல் அதிகமாக இருந்ததை தொடர்ந்து கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக கடந்த 11-ந் தேதி சேர்ந்தார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் அவருக்கு மூச்சு திணறல் அதிகமாக, சிகிச்சை பலன் இன்றி பலியானார். தற்போது மாவட்டத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 86 ஆக உயர்ந்துள்ளது. இதில் 16 பெண்கள் மற்றும் 70 ஆண்கள் அடங்குவர்.

Next Story