தோகைமலை அருகே காணாமல்போன விவசாயி குளத்தில் பிணமாக மீட்பு போலீசார் விசாரணை


தோகைமலை அருகே காணாமல்போன விவசாயி குளத்தில் பிணமாக மீட்பு போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 18 Sep 2020 1:22 AM GMT (Updated: 18 Sep 2020 1:22 AM GMT)

தோகைமலை அருகே காணாமல்போன விவசாயி குளத்தில் பிணமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தோகைமலை,

கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள மேலப்புதுப்பட்டியை சேர்ந்தவர் கருப்பையா (வயது 69). இவர் விவசாய கூலி வேலை செய்து வந்துள்ளார். கடந்த 15-ந்தேதி முதல் கருப்பையா தனது வீட்டிற்கு செல்லாமல் இருந்துள்ளார். இதையடுத்து அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் திருச்சி-தோகைமலை மெயின் ரோடு அருகே உள்ள கீழப்புதுப்பட்டி என்ற இடத்தின் அருகிள்ள அம்முனிபாறை குளத்தில் ஒரு ஆணின் உடல் மிதப்பதை கண்டு அப்பகுதியில் ஆடு மேய்த்து கொண்டிருந்தவர்கள் ஆர்.டி.மலை கிராமநிர்வாக அதிகாரி தேன்மொழிக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து அவர் தோகைமலை போலீசாருக்கும், மணப்பாறை தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தார். அதன்படி போலீசார் மற்றும் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அந்த ஆணின் உடலை மீட்டனர். அப்போது அவர், காணாமல் போன மேலப்புதுப்பட்டியை சேர்ந்த கருப்பையா என்பது தெரியவந்தது. இதையடுத்து தோகைமலை போலீசார் கருப்பையாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்து பாட்டில் மற்றும் ஆடைகள் கரையில் இருந்ததை போலீசார் கைப்பற்றினர்.

பரபரப்பு

இந்த சம்பவம் குறித்து ஆர்.டி.மலை கிராமநிர்வாக அதிகாரி தோகைமலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் அவர் குளத்தில் மூழ்கி இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்துபோன கருப்பையாவிற்கு அரியம்மாள் என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். மேலும் அம்முனிபாறை குளத்தில் ஆணின் உடல் மிதக்கும் தகவல் காட்டு தீ போல் பரவியதால் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் அங்கு கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story