ஒரே நாளில் 22 ஆயிரம் பேர் கொரோனாவில் இருந்து குணமாகினர்


ஒரே நாளில் 22 ஆயிரம் பேர் கொரோனாவில் இருந்து குணமாகினர்
x
தினத்தந்தி 18 Sep 2020 11:22 PM GMT (Updated: 18 Sep 2020 11:22 PM GMT)

மராட்டியத்தில் ஒரே நாளில் 22 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமாகி உள்ளனர்.

மும்பை,

மராட்டியத்தில் கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இதில் நேற்று மாநிலத்தில் புதிதாக 21 ஆயிரத்து 656 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாநிலத்தில் 12-வது முறையாக ஒரே நாளில் பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுவரை மாநிலத்தில் 11 லட்சத்து 67 ஆயிரத்து 496 பேர் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 8 லட்சத்து 34 ஆயிரத்து 432 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று மட்டும் மாநிலத்தில் 22 ஆயிரத்து 78 பேர் நோய் குணமாகி ஆஸ்பத்திரிகளில் இருந்து வீடு திரும்பி உள்ளனர்.

இதேபோல மாநிலத்தில் புதிதாக 405 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியாகி உள்ளனர். இதுவரை வைரஸ் நோய்க்கு 31 ஆயிரத்து 791 பேர் உயிரிழந்து உள்ளனர்.

புனே மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று புனே மாநகராட்சி பகுதியில் 1,875 பேருக்கும் (28 பேர் பலி), புறநகரில் 1,356 பேருக்கும், பிம்பிரி சிஞ்ச்வாட்டில் 810 பேருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தானே மாவட்டத்தை பொறுத்தவரை கல்யாண் டோம்பிவிலி, நவிமும்பையில் மட்டுமே பாதிப்பு அதிகளவில் இருந்தது. தற்போது தானே நகர், புறநகர் பகுதியிலும் நோய் பரவல் அதிகரித்து உள்ளது. இதில் நேற்று தானே மாநகராட்சியில் 431 பேருக்கும், புறநகரில் 445 பேருக்கும் வைரஸ் நோய் கண்டறியப்பட்டுள்ளது. இதேபோல கல்யாண் டோம்பிவிலியில் புதிதாக 557 பேருக்கும், நவிமும்பையில் 280 பேருக்கும், மிரா பயந்தரில் 201 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதேபோல மாநிலத்திலேயே அதிகபட்சமாக நேற்று நாக்பூர் மாநகராட்சியில் 59 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியானார்கள். மேலும் அங்கு புதிதாக 1,694 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Next Story