நடுவீரப்பட்டு அருகே பரபரப்பு கழுத்தை இறுக்கி விவசாயி கொலை 3 பேர் கைது


நடுவீரப்பட்டு அருகே பரபரப்பு கழுத்தை இறுக்கி விவசாயி கொலை 3 பேர் கைது
x
தினத்தந்தி 21 Sep 2020 5:53 AM GMT (Updated: 21 Sep 2020 5:53 AM GMT)

நடுவீரப்பட்டு அருகே கழுத்தை இறுக்கி விவசாயி கொலை செய்யப்பட்டார். இதில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லிக்குப்பம்,

நடுவீரப்பட்டு அடுத்த சாத்தமாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பஞ்சன் (வயது 42). விவசாயி. சம்பவத்தன்று மாலை, இவர் வீட்டை விட்டு வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது மகன் விஜய் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும், பஞ்சன் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், நேற்று முன்தினம் சிலம்பிநாதன்பேட்டை பகுதியில் உள்ள முந்திரி தோப்பில் பஞ்சன் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் கிடந்தார். இதுபற்றி அறிந்த பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு பிரசாந்த், துணை போலீஸ் சூப்பிரண்டு(பயிற்சி) ராஜலட்சுமி, இன்ஸ்பெக்டர் வீரமணி, சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பஞ்சனின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தடயவியல் நிபுணர் சம்பவ இடத்திற்கு வரவளைத்து தடயங்களை சேகரித்தனர்.

3 பேர் கைது

இதற்கிடையே தனது தந்தையின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி, விஜய் நடுவீரப்பட்டு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர். இந்த சூழ்நிலையில் சிலம்பிநாதன்பேட்டை கிராம நிர்வாக அலுவலகத்தில் சாத்தமாம்பட்டை சேர்ந்த சசிகுமார் (வயது 28), ஜெயபிரகாஷ் (25), நந்தகுமார் (22) ஆகியோர் சரணடைந்தனர். இதனைத்தொடர்ந்து நடுவீரப்பட்டு போலீசார், அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.

விசாரணையில், பஞ்சனின் உறவினர் சசிகுமார். இவர்களுக்கிடையே அவ்வப்போது மோதல் ஏற்படுவதும், பின்னர் சமாதானம் ஆவதுமாக இருந்துள்ளனர். சம்பவத்தன்று பஞ்சன், சசிகுமார், ஜெய்பிரகாஷ், நந்தகுமார், ஆகியோர் ஒன்றாக மது குடித்துள்ளனர். பின்னர், முன்விரோதத்தில் ஆத்திரத்தில் இருந்த சசிகுமார், தனது நண்பர்களுடன் சேர்ந்து கயிற்றால் பஞ்சனின் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார். இதையடுத்து, பஞ்சன் தூக்குபோட்டு கொண்டதாக நம்ப வைக்கும் வகையில் அங்குள்ள மரத்தில் அவரை தூக்கில் தொங்க போட்டு விட்டு அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றது தெரியவந்தது.

Next Story