காலி பணியிடங்களில் நியமிக்கக்கோரி ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சாலை மறியல்


காலி பணியிடங்களில் நியமிக்கக்கோரி ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 24 Sep 2020 2:41 AM GMT (Updated: 24 Sep 2020 2:41 AM GMT)

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை காலி பணியிடங்களில் நியமிக்கக்கோரி திருச்சியில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பெண்கள் உள்பட 230 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி,

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று பணி நியமனம் செய்யப்படாமல் இருப்பவர்கள் திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். 2013-ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நல சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பெண் விடுதலை கட்சியின் தலைவர் சபரிமாலா தலைமை தாங்கினார்.

சங்க ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். இந்த போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கருப்பு பட்டை அணிந்து இருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது, “சாகடிக்காதே... சாகடிக்காதே... சாதனை ஆசிரியர்களை சாகடிக்காதே...”, “பணி வழங்கு... பணி வழங்கு... ரூ.10 ஆயிரம் தொகுப்பூதியத்திலாவது பணி வழங்கு”, “தூண்டாதே... தூண்டாதே... ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை தற்கொலைக்கு தூண்டாதே...” காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பு, பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதில் சொல் என்பது உள்பட பல்வேறு கோஷங்களை எழுப்பினார்கள்.

230 பேர் கைது

கோரிக்கைகளை விளக்கி சங்கத்தின் முன்னணி நிர்வாகிகள் பேசிக்கொண்டிருந்தனர். பின்னர் அவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து சபரிமாலா உள்பட போராட்டத்தில் பங்கேற்ற 230 பேரை காந்தி மார்க்கெட் போலீசார் கைது செய்தனர்.

இவர்களில் சுமார் 70 பேர் பெண்கள் ஆவார்கள். கைது செய்யப்பட்ட அனைவரும் அருகில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்துவிட்டு திடீரென சாலை மறியல் போராட்டம் நடத்தியதும், கைது செய்யப்பட்டபோது அவர்களில் சிலர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதும் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த போராட்டத்தையொட்டி முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

Next Story