ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 3 பேர் பலி - மேலும் 140 பேருக்கு தொற்று


ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 3 பேர் பலி - மேலும் 140 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 27 Sep 2020 12:12 AM GMT (Updated: 27 Sep 2020 12:12 AM GMT)

ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 3 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 140 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

ஈரோடு, 

ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதிலும் குறிப்பாக மாநகர் பகுதியில் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். பொதுமக்கள் வெளியில் செல்லும் போது கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும்.

தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் விதித்தபோதிலும் கொரோனாவின் தாக்கம் குறைந்தபாடில்லை. மாவட்டம் முழுவதும் தினமும் 100-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இதற்கிடையில் ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்த 74 வயது ஆண் ஒருவருக்கு கடந்த 21-ந்தேதி பரிசோதனை செய்தபோது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் 24-ந்தேதி சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதேபோல் பவானி பகுதியை சேர்ந்த 60 வயது பெண் ஒருவர் காய்ச்சல் மற்றும் சளி தொல்லையால் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த 20-ந்தேதி அனுமதிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து அவருக்கு பரிசோதனை செய்தபோது கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். மேலும் அந்தியூர் பகுதியை சேர்ந்த 63 வயது ஆண் ஒருவருக்கு கடந்த 20-ந்தேதி கொரோனா தொற்று ஏற்பட்டது. பின்னர் அவர் சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இவரும் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார். நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் மாவட்டத்தில் 3 பேர் கொரோனாவுக்கு பலியானதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் நேற்று மாவட்டம் முழுவதும் புதிதாக 140 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 280-ஆக உயர்ந்துள்ளது. அதே நேரம் நேற்று மாவட்டம் முழுவதும் 115 பேர் குணம் அடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 5 ஆயிரத்து 60 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்துள்ளனர். தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,138 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Next Story