திருச்சி சம்பவம் எதிரொலி: புதுக்கோட்டையில் பெரியார் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு


திருச்சி சம்பவம் எதிரொலி: புதுக்கோட்டையில் பெரியார் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 28 Sep 2020 1:21 AM GMT (Updated: 28 Sep 2020 1:21 AM GMT)

திருச்சி சம்பவம் எதிரொலியாக புதுக்கோட்டையில் பெரியார் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டன.

புதுக்கோட்டை,

திருச்சி அருகே இனாம்குளத்தூரில் சமத்துவபுரத்தில் பெரியார் சிலை மீது காவி சாயம் பூசப்பட்டதால் நேற்று பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெரியார் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் திருச்சியில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரியார் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு நேற்று போடப்பட்டன. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் அந்தந்த பகுதியில் உள்ள பெரியார் சிலை முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். டவுன் பகுதியில் மின்சார வாரிய அலுவலகம் எதிரே உள்ள பெரியார் சிலை முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கூண்டுகள் அமைப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் சிலைகள் அவமதிக்கப்படுவதை தடுக்க முன்னெச்சரிக்கையாக கூண்டு அமைக்கும் பணி போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரியார், அண்ணா, காமராஜர், நேரு, இந்திரா காந்தி உள்பட அரசியல் கட்சி தலைவர்கள், அமைப்பின் தலைவர்கள் என 96 இடங்களில் சிலைகள் உள்ளன. இதில் சிலைகள் சேதப்படுத்துவது, அவமதிக்கப்படுவது உள்ளிட்டவற்றை தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்புகள், சிலையை சுற்றி இரும்பு கூண்டு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் 71 இடங்களில் சிலைகளுக்கு கூண்டு அமைக்கப்பட்டுவிட்டன. மீதமுள்ள 25 சிலைகளுக்கு கூண்டு அமைக்கப்பட உள்ளது. மாவட்டத்தில் பெரியார் சிலைகள் மொத்தம் 17 இடங்களில் உள்ளன. இதில் 14 இடங்களில் சிலையை சுற்றி தடுப்பு மற்றும் கூண்டு அமைக்கும் பணி முடிவடைந்து விட்டன. மீதமுள்ள 3 சிலைகளுக்கும் கூண்டு அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

புதுக்கோட்டை முதல் இடம்

அரசியல் கட்சி மற்றும் பல்வேறு அமைப்பின் தலைவர்கள் சிலை மர்மநபர்களால் அவமதிக்கப்படும் போது சட்டம் -ஒழுங்கு பிரச்சினை ஏற்படுகிறது. இதனை தடுப்பதற்காக மாவட்டம் முழுவதும் உள்ள தலைவர்களின் சிலைகளுக்கு கூண்டு அமைப்பதில் தமிழகத்தில் புதுக்கோட்டை முதல் இடத்தில் உள்ளது என போலீஸ் அதிகாரி கூறினார்.

Next Story