ஓரின சேர்க்கையால் மனைவியை பிரிந்தார் வடஇந்திய வாலிபரை கரம்பிடித்த குடகு டாக்டர்


ஓரின சேர்க்கையால் மனைவியை பிரிந்தார் வடஇந்திய வாலிபரை கரம்பிடித்த குடகு டாக்டர்
x
தினத்தந்தி 8 Oct 2020 10:23 PM GMT (Updated: 8 Oct 2020 10:23 PM GMT)

ஓரின சேர்க்கையால் மனைவியை பிரிந்த குடகு டாக்டர், வடஇந்திய வாலிபரை திருமணம் செய்துள்ளார். இதற்கு கொடவா சமுதாயத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பெங்களூரு,

ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொண்ட நடைமுறை மாறி சமீப காலமாக ஒரே பாலினத்தினர் திருமணம் செய்து கொள்ளும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. அதாவது பெண்ணும், பெண்ணும், ஆணும், ஆணும் திருமணம் செய்து கொள்ளும் ஓரின சேர்க்கை திருமணங்கள் அங்கொன்றும், இங்கொன்றுமாக அரங்கேறி வருகிறது.

கர்நாடகத்தில் குடகு மாவட்டத்தில் கொடவா சமுதாய மக்கள் அதிகளவில் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு என தனி கலாசாரம், பண்பாடு உள்ளது. இந்த நிலையில் தனது சமுதாய கலாசாரம், பண்பாட்டை மீறி குடகு மாவட்டத்தை சேர்ந்த டாக்டர் ஒருவர் ஓரின சேர்க்கை திருமணம் செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், விவாதபொருளாகவும் மாறியுள்ளது.

குடகை சேர்ந்த டாக்டர்

இதற்கு கொடவா சமுதாய மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

குடகு மாவட்டம் விராஜ்பேட்டை தாலுகா பொல்லரிமாடி கிராமத்தை சேர்ந்தவர் சரத் பொன்னப்பா (வயது 38). இவருக்கு திருமணம் ஆகி மனைவி உள்ளார். இந்த நிலையில் சரத் பொன்னப்பா அமெரிக்காவில் டாக்டராக பணியாற்றி வந்தார். அப்போது அவருக்கு வடஇந்தியாவை சேர்ந்த வாலிபரான சீக் தருண் சந்தீப் தேசாய் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் அவர்கள் இருவர் இடையேயும் ஓரின சேர்க்கையாக மாறியது. இதனால் சரத் பொன்னப்பா தனது மனைவியை பிரிந்தார். மேலும் ஒரே பாலினத்தை சேர்ந்த இருவரும் அதீத அன்பால் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். அதன்படி கடந்த மாதம் (செப்டம்பர்) 25-ந்தேதி சரத் பொன்னப்பா, சீக் தருண் சந்தீப் தேசாயை திருமணம் செய்துகொண்டார். அதாவது மணமக்களுக்கு எப்படி திருமணம் நடைபெறுமோ அதுபோல் இருவரும் புதிய ஆடைகள் அணிந்து திருமணம் செய்துள்ளனர். அதாவது இருவரும் கொடவா சமுதாய மக்களின் பாரம்பரிய உடை அணிந்து, நீண்ட வாள், கத்தி, தலைப்பாகை உள்ளிட்டவை அணிந்து கொடவா சமுதாய பாரம்பரிய முறையில் திருமணம் செய்து கொண்டனர்.

கொடவா மக்கள் எதிர்ப்பு

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இந்த ஓரின சேர்க்கை திருமணம் நடந்துள்ளது. தற்போது சரத் பொன்னப்பா- சீக் தருண் சந்தீப் தேசாய் ஆகியோரின் திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோவை சரத் பொன்னப்பா தனது சமூகவலைத்தளங்களில் பதிவிட்டார். அது வைரலாகி பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் ஓரின சேர்க்கை திருமணத்துக்கு அந்த நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

ஆனால் இந்தியாவில் இந்த ஓரின சேர்க்கைக்கு எதிர்ப்பும், தடையும் உள்ளது. இதனால் குடகு டாக்டரின் திருமணத்திற்கு குடகில் வசித்து வரும் கொடவா சமுதாய மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இயற்கைக்கு மாறானது

இதுகுறித்து குடகு கொடவா சமுதாய நிர்வாகி தேவய்யா என்பவர் கூறியதாவது:-

கொடவா சமுதாயத்திற்கு என்று தனி கலாசாரம், பண்பாடு உள்ளது. இந்த கலாசாரம், பண்பாட்டை இன்றைய இளம்தலைமுறையினர் பின்பற்றி காப்பாற்ற வேண்டும். ஆனால் அமெரிக்காவில் வசித்து வரும் டாக்டர் ஒருவர் ஓரின சேர்க்கை திருமணம் செய்துள்ளார். எங்கள் சமுதாய கலாசாரத்தை மீறி அவர் ஓரின சேர்க்கை திருமணம் செய்துள்ளார். இது கண்டிக்கத்தக்கது. இந்த திருமணம் இயற்கைக்கு விரோதமானது. இவ்வாறு திருமணம் செய்துகொள்பவர்கள் நீண்ட நாட்கள் சேர்ந்து வாழ முடியாது. இதுபோன்ற ஓரின சேர்க்கை திருமணங்கள் வெளிநாடுகளில் சகஜம். ஆனால் பழம்பெரும் கலாசாரம் கொண்ட நமது நாட்டில் இது சாத்தியமில்லை. கொடவா சமுதாயத்தின் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் காக்க நாங்கள் போராடி வருகிறோம். இந்த சூழ்நிலையில் ஓரின சேர்க்கை திருமணம் செய்தது சரியல்ல. அவருக்கு யாரும் மன்னிப்பு கொடுக்க கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story