நெல்லை அருகே போலீசார் வாகன சோதனை: வெடிப்பொருட்களுடன் 3 பேர் அதிரடி கைது


நெல்லை அருகே போலீசார் வாகன சோதனை: வெடிப்பொருட்களுடன் 3 பேர் அதிரடி கைது
x
தினத்தந்தி 14 Oct 2020 11:36 PM GMT (Updated: 14 Oct 2020 11:36 PM GMT)

நெல்லை அருகே போலீசார் நடத்திய வாகன சோதனையில் வெடிப்பொருட்களுடன் 3 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 53 டெட்டனேட்டர், 150 ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

நெல்லை,

நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவின்பேரில் போலீசார் தினமும் இரவில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த சோதனையில் போதை பொருட்கள், கஞ்சா, வெடிப்பொருட்கள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள், திருட்டுப்போன மோட்டார் சைக்கிள், கார்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரான்சிஸ் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

நெல்லையை அடுத்துள்ள பாப்பாக்குடி அருகே உள்ள ரங்கசமுத்திரம் பகுதியில் போலீசார் நடத்திய சோதனையில் சந்தேகப்படும் படியாக 2 மோட்டார் சைக்கிள்களில் சிலர் வந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்

அப்போது, அவர்களிடம் இருந்து வெடிப்பொருட்கள், கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் அந்த பகுதியை சேர்ந்த இசக்கிராஜா, 17 வயது வாலிபர் ஒருவர் என 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அவர்களிடம் இருந்து டெட்டனேட்டர், ஜெலட்டின் குச்சிகள் கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து புதுக்குடி பகுதியை சேர்ந்த 2 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 53 டெட்டனேட்டர், 150 ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன. போலீசார் நடத்திய விசாரணையில் இதை அவர்கள் மீன் பிடிப்பதற்காக வாங்கி சென்றதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக இசக்கிராஜா, மூக்கன் உள்பட 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மற்றவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story