ரூ.600 கோடி மதிப்பில் பவானி-தொப்பூர் ரோடு 4 வழிச்சாலையாக மாற்றும் பணி விரைவில் தொடக்கம் அமைச்சர் தகவல்


ரூ.600 கோடி மதிப்பில் பவானி-தொப்பூர் ரோடு 4 வழிச்சாலையாக மாற்றும் பணி விரைவில் தொடக்கம் அமைச்சர் தகவல்
x
தினத்தந்தி 25 Oct 2020 5:25 AM GMT (Updated: 25 Oct 2020 5:25 AM GMT)

ரூ.600 கோடி மதிப்பில் பவானி-தொப்பூர் ரோடு 4 வழிச்சாலையாக மாற்றும் பணி விரைவில் தொடங்கப்படும் என்று அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறினார்.

அம்மாபேட்டை,

ஒலகடம், அம்மாபேட்டை, நெரிஞ்சிப்பேட்டை பகுதிகளில் வசிக்கும் பயனாளிகளுக்கு இலவச நாட்டுக்கோழி குஞ்சுகள் வழங்கும் விழா அந்தந்த கால்நடை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. இந்தநிகழ்ச்சிக்கு ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் என்.கிருஷ்ணராஜ் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.பி. என்.ஆர்.கோவிந்தராஜர், அம்மாபேட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் வி.எஸ்.சரவணபவா, தெற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.மேகநாதன், பேரூர் கழக செயலாளர் டி.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

4 வழிச்சாலை

இந்த நிகழ்ச்சியில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கலந்துகொண்டு 1,646 பயனாளிகளுக்கு ரூ.50 லட்சம் மதிப்பிலான நாட்டு கோழிக்குஞ்சுகளை வழங்கி பேசினார். அப்போது அவர், ‘தமிழகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. பவானி முதல் அம்மாபேட்டை-மேட்டூர் வழியாக தொப்பூர் செல்லும் மெயின் ரோட்டை ரூ.600 கோடி செலவில் 4 வழி சாலையாக மாற்றி அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான பணிகள் தொடங்க உள்ளது. தமிழகத்தில் கிராமப்புற சாலைகள் அனைத்தும் தரமான முறையில் போடப்பட்டுள்ளது‘ என்றார்.

தெற்கு ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் பி.ஜி.முனியப்பன், வடக்கு ஒன்றிய பேரவை செயலாளர் ராதா, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் எ.ஈஸ்வரமூர்த்தி, தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் பங்க்பாலு, முன்னாள் நிலவள வங்கி தலைவர் கே.கே.மூர்த்தி உள்பட பலர் விழாவில் கலந்துகொண்டார்கள்.

Next Story