காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.406 கோடியில் கதவணை கட்டும் பணி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தொடங்கி வைத்தார்


காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.406 கோடியில் கதவணை கட்டும் பணி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 22 Nov 2020 10:22 AM GMT (Updated: 22 Nov 2020 10:22 AM GMT)

நஞ்சை புகளூரில் காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.406 கோடியில் கதவணை கட்டுவதற்கான பணியை காணொலி காட்சி மூலம் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தொடங்கி வைத்தார்.

நொய்யல், 

கரூர் மாவட்டம், நஞ்சை புகளூர் கிராமத்தில் உள்ள காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.406 கோடியில் கதவணை கட்டப்படுகிறது. இதற்கான பணி தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதனை சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தொடங்கி வைத்தார். அப்போது நஞ்சை புகளூர் காவிரி ஆற்றில் கதவணை கட்டும் இடத்தில், கரூர் மாவட்ட கலெக்டர் மலர்விழி தலைமையில், புரோகிதர்கள் வேத மந்திரங்கள் ஓதி தீபாராதனை காட்டி பூமி பூஜை செய்தனர்.

குடிநீர் ஆதாரம் மேம்படும்

பின்னர் மாவட்ட கலெக்டர் மலர்விழி கூறியதாவது:-

நஞ்சை புகளூர் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட உள்ள புதிய கதவணை 1,056 மீட்டர் நீளம் கொண்டதாக உள்ளது. இக்கதவணை அமைப்பதன் மூலம் சுமார் 0.8 டி.எம்.சி. தண்ணீரை சேமிக்க முடியும். புதிய கதவணை அமைக்கப்படும்போது வாங்கல் வாய்க்காலின் மூலம் 1,458 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். அதேபோல் நாமக்கல் மாவட்டம் மோகனூர் வாய்க்கால் மூலம் 2,583 ஏக்கர் பாசன வசதி பெறும். புதிய கதவணையின் மூலம் கரூர் மற்றும் நாமக்கல் மாவட்ட பகுதிகளில் குடிநீர் ஆதாரம் மேம்படுவதோடு நிலத்தடி நீர் மட்டம் உயரும்.

அதேபோல் விவசாயம் சார்ந்த தொழில்கள் மேம்படும். கதவணையை சுற்றியுள்ள பகுதி பொதுமக்களுக்கு சுற்றுலாத் தளமாக அமைய வாய்ப்பு இருப்பதால் அதனைச் சார்ந்த பொதுமக்களின் பொருளாதாரம் மேம்படும். கதவணை அமைக்க முழுவதும் உறுதுணையாக இருந்த அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கும், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

மாலை 4.30 மணிக்கு தொடங்கிய விழா மாலை 6.30 மணி வரை தொடர்ந்து நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் காவிரி ஆற்றில் தடுப்பணை கட்டும் பணியைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றதால் ஏராளமானோர் காவிரி ஆற்றில் குவிந்தனர். இதனால் காவிரி ஆற்றுக்குள் பூமி பூஜை செய்யும் இடத்திற்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

கலந்து கொண்டவர்கள்

இந்த நிகழ்ச்சியில் புகளூர் தாசில்தார் வேலுச்சாமி, மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் மற்றும் கரூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளருமான என்ஜினீயர் கமலக்கண்ணன், மாவட்ட மாணவரணி செயலாளர் வழக்கறிஞர் சரவணன், புஞ்சை புகளூர் பேரூர் கழக செயலாளர் விவேகானந்தன், காகிதபுரம் பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சதாசிவம் மற்றும் கூட்டுறவு வங்கிகளின் பிரதிநிதிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள், உள்ளாட்சித் துறை அதிகாரிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Next Story