தஞ்சையில், 2-வது நாளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை போராட்டம்


தஞ்சையில், 2-வது நாளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 3 Dec 2020 3:50 AM GMT (Updated: 3 Dec 2020 3:50 AM GMT)

தஞ்சையில் 2-வது நாளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 5 பெண்கள் உள்பட 45 பேர் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சாவூர்,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தியும், வடமாநிலங்களில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஒருவாரம் தொடர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர்.

அதன்படி தஞ்சை தலைமை அஞ்சல் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் நேற்று 2-வது நாளாக தொடங்கியது. இந்த முற்றுகை போராட்டத்துக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் வக்கீல் ஜீவக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் செந்தில்குமார், மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

45 பேர் கைது

இதில் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பக்கிரிசாமி, பூதலூர் ஒன்றிய செயலாளர்கள் பாஸ்கர், காந்தி, விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன், சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் ஜெயபால், துணை செயலாளர் அன்பு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முற்றுகை போராட்டத்தில், விவசாயிகளை பாதிக்கும் மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 5 பெண்கள் உள்பட 42 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Next Story