மங்களமேடு அருகே, ஊதியம் வழங்காததால் தூக்குப்போட்டு அரசு ஊழியர் தற்கொலை


மங்களமேடு அருகே, ஊதியம் வழங்காததால் தூக்குப்போட்டு அரசு ஊழியர் தற்கொலை
x
தினத்தந்தி 3 Dec 2020 11:44 PM GMT (Updated: 3 Dec 2020 11:44 PM GMT)

மங்களமேடு அருகே, மாத ஊதியம் வழங்காததால் தூக்குப்போட்டு அரசு ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.

மங்களமேடு,

பெரம்பலூர் மாவட்டம் மங்களமேட்டையை அடுத்துள்ள திம்மூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணியன்(வயது 48). அரசு ஊழியரான இவருக்கு கனகமணி என்ற மனைவியும், பாரதி, பசுபதி என்ற 2 மகன்களும், கலைவாணி என்ற மகளும் உள்ளனர். இதில் கலைவாணிக்கு திருமணம் ஆகிவிட்டது.

சுப்ரமணியன் பெரம்பலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பதிவேடு எழுத்தராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு ஆலத்தூர் தாலுகா அலுவலகத்தில் பணிபுரிந்தபோது முறைகேடு காரணமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பின்னர் மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில் பெரம்பலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பதிவேடு எழுத்தராக பணி நியமனம் செய்யப்பட்டு பணிபுரிந்து வந்தார்.

மாத ஊதியம்...

இந்நிலையில் இவருக்கு வழங்க வேண்டிய மாத ஊதியம் வழங்கப்படாததால் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் மாத ஊதியம் வழங்கப்படவில்லை. மேலும் இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக தெரிகிறது. குடும்ப செலவுக்கு பணம் இல்லாததால் அவர் மன உளைச்சலில் இருந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் வீட்டில் உள்ள அறையில் தூங்க சென்றார். நேற்று காலை வீட்டில் உள்ளவர்கள் பார்த்தபோது அவர் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த குன்னம் போலீசார், சுப்ரமணியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story