செந்துறை அருகே மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி சாவு மகள் கண் முன்னே பரிதாபம்


செந்துறை அருகே மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி சாவு மகள் கண் முன்னே பரிதாபம்
x
தினத்தந்தி 5 Dec 2020 11:32 PM GMT (Updated: 5 Dec 2020 11:32 PM GMT)

செந்துறை அருகே மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.

செந்துறை,

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள இலங்கைச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் ராசு. இவருடைய மனைவி முத்துலட்சுமி (வயது 65). இவர்களுக்கு செல்வி (40), அமுதா (35) என 2 மகள்கள் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி வெளியூர்களில் வசித்து வருகின்றனர். ராசு ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், முத்துலட்சுமி அப்பகுதியில் உள்ள குடிசை வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில் அமுதா, சில நாட்களுக்கு முன்பு முத்துலட்சுமியை பார்க்க வந்தார். நேற்று முன்தினம் மதியம் தனது குடிசை வீட்டில் முத்துலட்சுமி, அமுதாவுடன் முறுக்கு தயாரித்துக் கொண்டு இருந்தார். அப்போது கடந்த சில நாட்களாக செந்துறை பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக, அவரது வீட்டின் மண் சுவர் திடீரென சரிந்தது. இதனை கண்ட அமுதா தப்பித்து, தனது தாயாரை காப்பாற்ற முயன்றார். ஆனால் அதற்குள் சுவர் திடீரென இடிந்து விழுந்தது.

சாவு

இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயமடைந்த முத்துலட்சுமியை உறவினர்கள் மீட்டு செந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த செந்துறை தாசில்தார் முத்துகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். இதுகுறித்து செந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். மகள் கண் முன்னே சுவர் இடிந்து விழுந்து தாய் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story