சேலத்தில், 2 மகன்களை கொன்று விட்டு மனைவியுடன் தொழிலாளி தற்கொலை செய்தது ஏன்? செல்போன் ஆய்வில் நெஞ்சை உருக்கும் தகவல்கள்


சேலத்தில், 2 மகன்களை கொன்று விட்டு மனைவியுடன் தொழிலாளி தற்கொலை செய்தது ஏன்? செல்போன் ஆய்வில் நெஞ்சை உருக்கும் தகவல்கள்
x
தினத்தந்தி 10 Dec 2020 4:15 PM GMT (Updated: 10 Dec 2020 3:42 PM GMT)

சேலத்தில் 2 மகன்களை கொன்று விட்டு மனைவியுடன் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டது ஏன்? என்பது குறித்து செல்போனை ஆய்வு செய்த போது போலீசாருக்கு நெஞ்சை உருக்கும் தகவல்கள் கிடைத்துள்ளன.

சேலம், 

சேலம் பொன்னம்மாபேட்டை அருகே உள்ள வால்காடு பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர் சலூன் கடையில் வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி கோகிலா. இவர்களுக்கு மதன்குமார், வசந்தகுமார், கார்த்திக் ஆகிய 3 மகன்கள் இருந்தனர். இதில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மதன்குமார் கடந்த மார்ச் மாதம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதனால் மனவேதனையில் இருந்த முருகன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது மகன்களுக்கு டீயில் திராவகம் கலந்து கொடுத்து கொலை செய்தார். பின்னர் அதே டீயை கோகிலா குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து முருகன் திராவகத்தை மதுவில் கலந்து குடித்து இறந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் உதவி கமிஷனர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மதன்குமார் இறந்த துக்கத்தில் அவர்கள் இறந்தது தெரியவந்தது.

முருகனுக்கு கடன் தொல்லை உள்ளதா? அல்லது வேறு காரணம் ஏதும் உள்ளதா? என அவர் வேலை பார்த்த சலூன் கடை உரிமையாளர் உள்பட பலரிடம் உதவி கமிஷனர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் விசாரித்தனர். மேலும் முருகனின் செல்போனையும் போலீசார் ஆய்வு செய்தனர்.

அப்போது நெஞ்சை உருக்கும் சில தகவல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்து போலீசார் கூறியதாவது.

உயிரிழந்த தனது மகன் மதன்குமாரின் புகைப்படத்தை வைத்துக்கொண்டு மகன் வருவான் என்று கூறி முருகன் தினமும் அழுதுள்ளார். மேலும் மதன்குமார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற போது இறக்கும் தருவாயில் முருகனின் கைகளை பிடித்து கொண்டு, அப்பா உங்க கூட வாழ ஆசையாக இருக்கிறது, என்னை காப்பாத்துங்க என்று கூறியதாக கூறப்படுகிறது.

பின்னர் மதன்குமார் இறந்ததால் அந்த குடும்பமே கடும் அதிர்ச்சியில் உறைந்து போனது. உயிரிழந்த மகன் தன்னை பார்க்க வருவான் என்று முருகன் சிலரிடம் கூறி வந்தார். இதற்காக அவர் இரவு நேரத்தில் தினமும் கதவை திறந்து வைத்துள்ளார்.

தூங்கும் போது மகனின் பேண்ட், சட்டையை அருகில் வைத்துள்ளார். இதுதவிர தான் அசந்து தூங்கி விட்டால் மகனை பார்க்க முடியாதோ என நினைத்து தலையணை பக்கத்தில் வாசல் நேராக செல்போனில் வீடியோ கேமராவை ஆன் செய்து அதனை பதிவு செய்து வந்தார்.

மறுநாள் காலையில் அதனை பார்த்து உள்ளார். இவ்வாறு தினமும் பதிவு செய்து பார்த்து வந்தார். இதில் ஒரு பதிவு மட்டும் 2¾ மணி நேரம் ஓடுகிறது. இதன் மூலம் முருகன் தனது மகன் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தது தெரியவந்தது. இதனாலேயே இந்த சோக நிகழ்வு நடந்துள்ளது. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

ஆய்வு செய்த செல்போனை கோர்ட்டில் ஒப்படைக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story