திருப்பூர் மாநகராட்சி பகுதியில் ரூ.10 ஆயிரம் கடன் பெற வியாபாரிகள் விண்ணப்பிக்கலாம் ஆணையாளர் அறிவிப்பு


திருப்பூர் மாநகராட்சி பகுதியில் ரூ.10 ஆயிரம் கடன் பெற வியாபாரிகள் விண்ணப்பிக்கலாம் ஆணையாளர் அறிவிப்பு
x
தினத்தந்தி 30 Dec 2020 6:06 AM GMT (Updated: 30 Dec 2020 6:06 AM GMT)

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் தெருவோர வியாபாரிகள் ரூ. 10 ஆயிரம் கடன் உதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார் அறிவித்துள்ளார்.

திருப்பூர்,

கொரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்ட தெருவோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் பிரதம மந்திரியின் சுயசார்பு திட்டத்தில் சிறப்பு நுண் கடன் வசதி திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் மூலதன கடனாக 7 சதவீத வட்டி மானியத்துடன் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். முறையாக திருப்பி செலுத்துவதை ஊக்குவிக்கவும், டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்கவும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

தெருவோர வியாபாரிகள் கணக்கெடுப்பில் பங்கேற்று நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும். கணக்கெடுப்பில் விடுபட்டு அடையாள அட்டை பெறாத தெருவோர வியாபாரிகள், நகர்ப்புற பகுதிகளில் கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதிக்கு முன்பு வியாபாரம் செய்து வந்த வியாபாரிகள், நகரங்களின் அருகில் உள்ள கிராமத்து பகுதியில் இருந்து தினமும் நகர் பகுதிகளுக்கு வந்து வியாபாரம் செய்து திரும்பும் வியாபாரிகள் இந்த நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்.

எங்கு விண்ணப்பிக்கலாம்

தெருவோர வியாபாரிகளுக்கான அடையாள அட்டை, தெருவோர வியாபாரிகள் நல வாரியம் அல்லது தெருவோர வியாபாரிகள் சங்கத்தின் மூலம் பெறப்பட்ட அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் எண், வங்கி கணக்கு எண், செல்போன் எண் ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் மாநகராட்சி அலுவலகம், 1-வது, 2-வது, 3-வது, 4-வது மண்டல அலுவலகங்கள், நடராஜ் தியேட்டர் ரோட்டில் உள்ள மாநகராட்சி வாகனம் நிறுத்துமிடம், அவினாசி ரோடு நகர்ப்புற வாழ்வாதார மையம், அனைத்து பொது இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். மாநகரப் பகுதியில் 3,100 பேருக்கு கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆயிரத்து 100 பேர் இதுவரை விண்ணப்பித்துள்ளனர். மீதமுள்ளவர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறலாம். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

Next Story