9 மாதத்திற்கு பிறகு சேவை: திருச்சி-ராமேசுவரம் இடையே மீண்டும் சிறப்பு ரெயில் இயக்கம்


9 மாதத்திற்கு பிறகு சேவை: திருச்சி-ராமேசுவரம் இடையே மீண்டும் சிறப்பு ரெயில் இயக்கம்
x
தினத்தந்தி 5 Jan 2021 1:58 AM GMT (Updated: 5 Jan 2021 1:58 AM GMT)

9 மாதத்திற்கு பிறகு திருச்சி-ராமேசுவரம் இடையே நேற்று முதல் மீண்டும் ரெயில் சேவை தொடங்கியது.

திருச்சி,

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 27- ந் தேதி முதல் அனைத்து ரெயில்களும் ரத்து செய்யப்பட்டன. ஊரடங்கு தளர்வு காரணமாக கடந்த 3 மாதங்களுக்கு முன்பிருந்து படிப்படியாக பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு ரெயில்களாக இயக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் கடந்த 9 மாதத்துக்கு பிறகு திருச்சி-ராமேசுவரம் இடையே நேற்று முதல் மீண்டும் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06849) சேவையாக இயக்கப்பட்டது.

பயணிகள் மகிழ்ச்சி

திருச்சி ஜங்சன் ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று காலை 7 மணிக்கு 10 பெட்டிகளுடன் புறப்பட்டது. இதனால் பயணிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த ரெயில் குமாரமங்கலத்திற்கு காலை 7.15 மணிக்கும், புதுக்கோட்டைக்கு காலை 7.55 மணிக்கும், திருமயத்திற்கு காலை 8.08 மணிக்கும், காரைக்குடிக்கு காலை 8.30 மணிக்கும், தேவகோட்டைக்கு 8.42 மணிக்கும், சிவகங்கைக்கு காலை 9.10 மணிக்கும், மானாமதுரைக்கு காலை 9.50 மணி்க்கும், பரமக்குடிக்கு காலை 10.15 மணிக்கும், ராமநாதபுரத்திற்கு காலை 10.40 மணிக்கும், மண்டபத்தி்ற்கு காலை 11.07 மணி மற்றும் பாம்பனுக்கு 11.24 மணிக்கும், பாம்பன் ரெயில் பாலம் வழியாக மதியம் 12.15 மணிக்கு ராமேசுவரம் ரெயில் நிலையம் சென்றடைந்தது.

முன்பதிவு மட்டுமே அனுமதி

பின்னர் இந்த ரெயில் மீண்டும் பிற்பகல் 2.55 மணிக்கு ராமேசுவரம் ரெயில் (வண்டி எண்:06850) நிலையத்தில் இருந்து புறப்பட்டு அதே வழியாக திருச்சிக்கு இரவு 8.05 மணிக்கு வந்தடைந்தது.

9 மாதத்திற்கு பிறகு திருச்சி-ராமேசுவரம் இடையே இயக்கப்படும் இந்த ரெயிலில் முன்பதிவு செய்து மட்டுமே பயணம் செய்ய முடியும். ராமேசுவரத்தில் இருந்து தினமும் சென்னைக்கு 2 ரெயில்களும், வாரத்தில் ஒரு முறை ஒடிசா மாநிலம் செல்லும் ஓகா எக்ஸ்பிரஸ் மற்றும் புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ் ரெயில்களும் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story