கடல் வழியாக வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற 6 டன் மஞ்சள் பறிமுதல் குமரியில் பரபரப்பு


கடல் வழியாக வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற 6 டன் மஞ்சள் பறிமுதல் குமரியில் பரபரப்பு
x
தினத்தந்தி 12 Jan 2021 4:37 AM GMT (Updated: 12 Jan 2021 4:37 AM GMT)

குமரியில் கடல் வழியாக வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற 6 டன் மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கொல்லங்கோடு,

குமரி மாவட்டம் தேங்காப்பட்டணத்தில் மீன்பிடி துறைமுகம் உள்ளது. இங்கு இரையுமன்துறை மீன் இறங்கு தளத்தில் லட்சத்தீவு பதிவு எண் கொண்ட விசைப்படகு ஒன்று படகுகளுடன் கூட்டமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்த விசைப்படகில் கடல் மார்க்கமாக கடத்தி செல்ல சாக்குமூடைகளில் மஞ்சள் மறைத்து வைத்திருப்பதாக நேற்று காலை நித்திரவிளை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு நித்திரவிளை போலீசார் விரைந்து சென்று படகை சோதனை செய்தனர்.

6 டன் மஞ்சள் பறிமுதல்

படகின் உள்ளே மீன்கள் வைக்கப்படும் சேமிப்பு கிடங்கிற்குள் சுமார் 180 சாக்குமூடைகளில் 6 டன் மஞ்சள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து போலீசார் மஞ்சள் மற்றும் படகை பறிமுதல் செய்து படகின் உரிமையாளர் யார்? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த விசைப்படகு லட்சத்தீவு பகுதியை சேர்ந்த அன்வர் என்பவருக்கு சொந்தமானது என்றும் தற்போது அந்த படகை ஒப்பந்த அடிப்படையில் குமரி மாவட்டம் வள்ளவிளை மீனவ கிராமத்தை சேர்ந்த ஜோபு (43) என்பவர் பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது.

விசாரணை

தொடர்ந்து போலீசார் வள்ளவிளையை சேர்ந்த ஜோபுவை தேடி வருகின்றனர். மேலும் எந்த நாட்டுக்கு மஞ்சளை கடத்த முயன்றார்? என்பது தொடர்பாக விசாரணையும் நடந்து வருகிறது. கடல் வழியாக வெளிநாட்டுக்கு மஞ்சள் கடத்த முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story