தொழில்துறையை மேம்படுத்த 7 அம்ச திட்டம்: சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன் கமல்ஹாசன் பேட்டி


தொழில்துறையை மேம்படுத்த 7 அம்ச திட்டம்: சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன் கமல்ஹாசன் பேட்டி
x
தினத்தந்தி 15 Jan 2021 5:00 AM GMT (Updated: 15 Jan 2021 5:00 AM GMT)

தொழில்துறையை மேம்படுத்த 7 அம்ச திட்டங்கள் உள்ளதுடன், வருகிற சட்ட மன்ற தேர்தலில் நிச்சயம் போட்டியிட உள்ளதாக கோவையில் கமல்ஹாசன் தெரிவித்து உள்ளார்.

கோவை, 

நாங்கள் பயணிக்கும் இடங்களில் எல்லாம் பேரெழுச்சியை பார்க்கிறோம். இது சந்தோசமாக உள்ளது. ஒவ்வொரு கட்டமாக எங்களது திட்டங்களை விளக்கி வருகிறோம். இப்பொழுது 3-ம் கட்டமாக தொழில்துறைக்கான தேர்தல் வாக்குறுதிகளை அளிக்கிறோம். இது 7 அம்சங்களை கொண்ட திட்டமாகும். புத்தாக்கம் மற்றும் புதிய சாத்தியக்கூறுகளுக்கான துறை எனும் திட்டத்தின்படி அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களை தொழில் முனைவு கண்டுபிடிப்புகளை ஊக்குவித்து அவற்றை நடைமுறை சாத்தியமாக்கிடவும், தொழில்துறை புரட்சி 4.0 க்கு வித்திடுவதற்கு ஏதுவாக துறை நிறுவப்படும். தொழில்துறையுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறை திட்டத்தில் தொழில், கல்வி, அரசு சாரா நிறுவனங்கள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து ஒவ்வொரு காலாண்டிலும் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும்.

சிறு, குறு நிறுவனங்கள்

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை வலுப்படுத்துதல் திட்டத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பணப்புழக்கத்தை உறுதி செய்வோம். குறைந்த வளர்ச்சி உள்ள பகுதிகள் மேம்பாடு என்ற திட்டத்தின்படி பெரிய தொழில்நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகள் மற்றும் கிளை அலுவலகங்களை அமைக்க ஊக்குவிக்கப்படும்.

அமைப்பு சாரா தொழிலாளர்களை வலுப்படுத்துதல் திட்டத்தில் கட்டாய மற்றும் விரிவான காப்பீடு, ஓய்வூதிய திட்டங்கள், பணி பாதுகாப்பு ஆகியவற்றை கொண்டு வருவதன் மூலம் அவர்களும் அமைப்பு சார்ந்த தொழிலாளர்களாக முறைப்படுத்தபடுவர். தொழில் மேம்பாட்டு மையங்கள் நிறுவும் திட்டத்தின்படி மாவட்ட தலைமையகத்திலும் புதிய திறன் மேம்பாட்டு மையங்கள் நிறுவப்படும். தொழில்துறை வளர்ச்சி முதலீட்டு திட்டத்தில் புதிய தொழில்துறை முதலீடுகள் செய்ய முற்படும்போது முன்மொழிவு செய்வது முதல் அதை செயல்படுத்தும் வரை முறையான கலெக்கெடுவுடன் கூடிய திட்டங்களை செயல்படுத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிச்சயம் போட்டியிடுவேன்

தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு, கமல்ஹாசன் அளித்த பதில் வருமாறு:-

கேள்வி: மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு சட்டமன்ற தேர்தலில் ஒரு எம்.எல்.ஏ. கூட கிடைக்காது என்று அமைச்சர் கருப்பண்ணன் கூறியுள்ளாரே?

பதில்: அது அவரது பிரார்த்தனையாக இருக்கலாம். ஆனால் எங்கள் பயணத்தில் கிடைக்கும் செய்தி வேறாக இருக்கிறது.

கேள்வி: சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவீர்களா?

நிச்சயமாக நான் போட்டியிடுவேன். மேலும் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடுவதாக தகவல் உள்ளதே என்று கேட்கிறீர்கள். அது தகவல்தான், நான் சொல்லவில்லை.

கேள்வி: உங்களது தலைமையில் கூட்டணி அமைக்கப்படுமா?

பதில்: இந்த மாத இறுதிவரை காலஅவகாசம் உள்ளது. தேர்தல் நேரத்தில் அதுகுறித்து சொல்லப்படும்.

கேள்வி: திராவிட கட்சிகளை போல் நீங்களும் இலவசங்கள் அறிவிக்கிறீர்களே...

பதில்: அது இலவசம் அல்ல. வீட்டுக்கு ஒரு கணினி என்பது, எப்படி மின்வாரிய இணைப்பு வீடுகளுக்கு வழங்கப்படுகிறதோ அதைப் போன்றது.

கேள்வி: சாதி அடிப்படையில் வேட்பாளர்களை நிறுத்துவீர்களா?

பதில்: நாங்கள் முன்னிறுத்த போவது சாதனையைதான், தேவைப்பட்டால் பொதுதொகுதியில் கூட தாழ்த்தப்பட்ட வேட்பாளர்களை நிறுத்துவோம்.

முழு நேர அரசியல்

கேள்வி: முழுநேர அரசியலில் ஈடுபடுவீர்களா?

பதில்: முழுநேர அரசியல் என்று எதுவும் கிடையாது. அரசியல் என்பது தியாகமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதை ஒரு வேலையாக எடுத்து கொண்டும் செய்யலாம். அதற்கு தனக்கென்று சம்பாத்தியத்திற்கு ஒரு வழி இருப்பது தவறு இல்லை. அப்படி இருப்பது இன்னும் சிறப்பு அரசியலுக்கு. இதை பெரியாறும் கூறியுள்ளார்.

கேள்வி: நடிகர் ரஜினிகாந்த் வீட்டுசிறையில் வைக்கப்பட்டு உள்ளாரா?

பதில்: எனக்கு தெரியாது

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அவர் கோவை சுந்தராபுரம், மதுக்கரை உள்பட கோவையில் பல்வேறு பகுதிகளில் திறந்தவேனில் நின்றபடி பிரசாரத்தில் ஈடுபட்டார். 

Next Story