ஆன்லைன் வகுப்பால் கடைக்கு செல்ல மறுப்பு; தாய் கண்டித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை


ஆன்லைன் வகுப்பால் கடைக்கு செல்ல மறுப்பு; தாய் கண்டித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை
x
தினத்தந்தி 16 Jan 2021 8:30 PM GMT (Updated: 16 Jan 2021 6:44 PM GMT)

ஆன்லைன் வகுப்பு இருப்பதாக கூறி கடைக்கு செல்ல மறுத்ததை தாய் கண்டித்ததால் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடைக்கு செல்ல மறுப்பு
ஆவடியை அடுத்த அயப்பாக்கம் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஸ்டெபி கிராப் (வயது 19). இவர், அண்ணனூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் மதியம் ஸ்டெபி கிராபின் தாயார் ஸ்டெல்லா மேரி, மகளிடம் அருகில் உள்ள கடைக்கு சென்று பால் வாங்கி வரும்படி கூறினார். அதற்கு ஸ்டெபி கிராப், எனக்கு ஆன்லைன் வகுப்பு இருப்பதால் கடைக்கு போக முடியாது என மறுத்தார்.

தூக்குப்போட்டு தற்கொலை
இதனால் ஸ்டெல்லா மேரி, மகளை கண்டித்து விட்டு பால் வாங்குவதற் காக கடைக்கு சென்றுவிட்டார். சிறிதுநேரம் கழித்து பால் வாங்கி கொண்டு வீட்டுக்கு திரும்பி வந்தார்.

அப்போது தனது மகள் ஸ்டெபி கிராப், வீட்டின் படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த திருமுல்லைவாயல் போலீசார், ஸ்டெபி கிராப் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story