விபசார புரோக்கர் கொலை: லாரி டிரைவரை பிடிக்க தனிப்படை போலீசார் திருவண்ணாமலை விரைந்தனர்


விபசார புரோக்கர் கொலை: லாரி டிரைவரை பிடிக்க தனிப்படை போலீசார் திருவண்ணாமலை விரைந்தனர்
x
தினத்தந்தி 19 Jan 2021 2:33 AM GMT (Updated: 19 Jan 2021 2:33 AM GMT)

விபசார புரோக்கர் கொலையில் தொடர்புடைய லாரி டிரைவர் திருவண்ணாமலையில் பதுங்கி இருப்பதாக வந்த தகவலையடுத்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்துள்ளனர்.

குருபரப்பள்ளி, 

கிருஷ்ணகிரி மாவட்டம் கே.பூசாரிப்பட்டியை சேர்ந்தவர் 40 வயது பெண். அவர் ஓசூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் போலுப்பள்ளி அருகில் தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டு விபசாரம் செய்து வந்தார். அவருக்கு புரோக்கராக தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள பெரியாம்பட்டியை சேர்ந்த வெங்கடேசன் (45) என்பவர் இருந்தார்.

நேற்று முன்தினம் அதிகாலையில் அவர்கள் போலுப்பள்ளி அருகே நின்றபோது அந்த வழியாக வந்த லாரி டிரைவரை நிறுத்தி உல்லாசத்திற்கு அழைத்தனர். அப்போது ஏற்பட்ட பிரச்சினையில் லாரி டிரைவர் இரும்பு கம்பியால் வெங்கடேசனையும், அந்த பெண்ணையும் சரமாரியாக தாக்கி விட்டு சென்றார். இதில் வெங்கடேசன் இறந்தார். அந்த பெண் படுகாயம் அடைந்தார்.

இந்த கொலை தொடர்பாக குருபரப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி விசாரணை நடத்தினார். அப்போது கிடைத்த தகவல்கள் வருமாறு:-

தனிப்படை போலீசார்

நேற்று முன்தினம் அதிகாலை அந்த பெண்ணும், வெங்கடேசனும் சாலையோரம் நின்று அந்த வழியாக சென்ற லாரிகளை நிறுத்தி டிரைவர்களை உல்லாசத்திற்கு அழைத்தனர். அப்போது திருவண்ணாமலை மாவட்டம் மருதுவம்பாடியை சேர்ந்த வேலு என்பவரின் மகன் தீபா (32) என்பவர் அங்கு வந்துள்ளார்.

அவரை உல்லாசத்திற்கு அழைத்த போது ஏற்பட்ட பிரச்சினையில் அவர் இரும்பு கம்பியால் 2 பேரையும் தாக்கி சென்றது தெரியவந்தது.

இந்த நிலையில் தீபா திருவண்ணாமலை பகுதியில் பதுங்கி உள்ளதாக தகவல் கிடைத்ததையடுத்து அவரை பிடிக்க தனிப்படை போலீசார் அங்கு சென்றுள்ளனர். இதுகுறித்து போலீசாரிடம் விசாரித்தபோது இந்த கொலையில் திருவண்ணாமலை டிரைவர் தீபா என்பவருக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கிறோம். அவரை தேடி வருகிறோம் என்றனர்.

Next Story