ராதாபுரம் அருகே தோட்டத்தில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலைமறியல்


ராதாபுரம் அருகே தோட்டத்தில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 21 Jan 2021 7:23 PM GMT (Updated: 21 Jan 2021 7:23 PM GMT)

ராதாபுரம் அருகே தோட்ட கம்பிவேலியில் மின்சாரம் தாக்கி தொழிலாளி இறந்தார். அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராதாபுரம்,

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள சமூகரெங்கபுரத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி (வயது 59). கூலி தொழிலாளியான இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். நேற்று முன்தினம் பெரியசாமி அப்பகுதியில் அரிகண்ட பெருமாள் என்பவரது தோட்டத்தில் கூலி வேலைக்கு சென்றார். அப்போது தோட்டத்தின் கம்பிவேலியில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது.

இதனை அறியாமல் கம்பிவேலியை பெரியசாமி தொட்டபோது, அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், ராதாபுரம் போலீசார் விரைந்து சென்று, இறந்த பெரியசாமியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உறவினர்கள் சாலைமறியல்

இதற்கிடையே தோட்ட உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இறந்த பெரியசாமியின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, அவரது உடலை வாங்க மறுத்து, சமூகரெங்கபுரத்தில் வள்ளியூர்-திருச்செந்தூர் மெயின் ரோட்டில் நேற்று காலையில் குடும்பத்தினர், உறவினர்கள் அமர்ந்து திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அந்த வழியாக செல்லும் வாகனங்கள் நாங்குநேரி, மன்னார்புரம் வழியாக திருப்பி விடப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தாசில்தார் கனகராஜ் மற்றும் அதிகாரிகள், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் உடன்பாடு ஏற்படாததால் இரவு வரையிலும் சாலைமறியல் போராட்டம் நடந்தது. பின்னர் இரவில் சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் மீண்டும் அதிகாரிகள், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பெரியசாமியின் பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு உறவினர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story