பேரறிவாளன் விடுதலை தொடர்பாக கோர்ட்டு என்ன நடவடிக்கை எடுத்தாலும் ஆட்சேபனை இல்லை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி


பேரறிவாளன் விடுதலை தொடர்பாக கோர்ட்டு என்ன நடவடிக்கை எடுத்தாலும் ஆட்சேபனை இல்லை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி
x
தினத்தந்தி 23 Jan 2021 1:26 AM GMT (Updated: 23 Jan 2021 1:26 AM GMT)

பேரறிவாளன் விடுதலை தொடர்பாக கோர்ட்டு என்ன நடவடிக்கை எடுத்தாலும் ஆட்சேபனை இல்லை என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்துக்கு ராகுல்காந்தி எம்.பி. வருகை தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கலந்து கொண்டார்.

அப்போது பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-

தமிழக மக்களை பொறுத்தவரை பிரதமர் மோடி மீது கடும் கோபத்தில் உள்ளனர். நாடாளுமன்ற தேர்தலில் அந்த கோபத்தை வெளிப்படுத்தினார்கள். வருகிற சட்டமன்ற தேர்தலிலும் மோடிக்கு எதிராக அவர்கள் வாக்களிப்பார்கள். மோடியின் ஆட்சியில் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து விட்டது. விவசாயிகள் கொட்டும் பனி, கடும் வெயிலில் மாதக்கணக்கில் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களின் குறைகளை கேட்கவில்லை. சரக்கு மற்றும் சேவை வரியால் சிறு தொழில்கள் முடங்கி, வியாபாரிகள் கடும்பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இதனால் மக்கள் பிரதமர் மோடி மீது கடும் அதிருப்தியடைந்துள்ளார்கள். இந்த ஆட்சியில் எது வளர்ந்து இருக்கிறது என்றால் அது மோடியின் தாடி மட்டும்தான்.

இந்த சூழலில் ராகுல்காந்திதான் இந்தியாவை மீட்க முடியும் என்று மக்கள் நம்புகிறார்கள். அவர்கள் நம்புகின்ற தலைவராக ராகுல்காந்தி இருக்கிறார். எனவே அவரது தமிழக சுற்றுப்பயணம் மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

ஆட்சேபனை இல்லை

பேரறிவாளன் விடுதலை தொடர்பாக கோர்ட்டு என்ன முடிவு எடுத்தாலும் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது.

காங்கிரஸ் கட்சி தி.மு.க. கூட்டணியில் இருக்கிறது. பொதுவாக அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களை முன்னிலைப்படுத்திக்கொள்வது இயல்பு. காங்கிரஸ் கட்சி 234 தொகுதிகளிலும் போட்டியிட வேண்டும் என்பது எங்கள் ஆசை. காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று கூறி வருகிறோம். ஆனால் தற்போதைய சூழலில் அது சாத்தியமில்லை. எல்லா கட்சிகளும் நாங்கள் ஆட்சியை பிடிப்போம் என்று கூறுவார்கள். பா.ம.க.வினர் ஆட்சிக்கு வருவோம் என்று கூறுவார்கள்.

சரத்குமாரிடம் கேட்டால் அவரும் ஆட்சி அமைப்போம் என்பார். அதுபோல ஜெகத்ரட்சகனும் தங்கள் கட்சியை முன்னிலைப்படுத்தி பேசியிருப்பார்.

தற்போதைய சூழலில் சிறையில் இருந்து விடுதலையாகும் சசிகலா நல்லபடியாக குணம் அடைந்து வரவேண்டும் என்று விரும்புகிறேன்.

இவ்வாறு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.

Next Story