இந்தி மட்டுமே ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என பாஜ.க. விரும்புகிறது ப.சிதம்பரம் பேச்சு


இந்தி மட்டுமே ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என பாஜ.க. விரும்புகிறது ப.சிதம்பரம் பேச்சு
x
தினத்தந்தி 1 April 2021 1:05 AM GMT (Updated: 1 April 2021 1:05 AM GMT)

இந்தி மட்டுமே ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என பாஜ.க. விரும்புகிறது ப.சிதம்பரம் பேச்சு.

பூந்தமல்லி, 

ஸ்ரீபெரும்புதூர் (தனி) சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி் வேட்பாளராக செல்வபெருந்தகை போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் பிரசார கூட்டம் குன்றத்தூர் பஸ் நிலையம் அருகே தி.மு.க. மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறுகையில்:-

10 ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் முதல் 5 ஆண்டுகள் யார் முதல்-அமைச்சர் என்பது தெரியும். அவரை பற்றி பேச மாட்டேன் அவர் மறைந்து விட்டார். அது நாகரிகம் இல்லை. அந்த ஆட்சிக்கு கோர்ட்டு தீர்ப்பு தந்து அத்தாட்சி தந்தது. ஜெயலலிதா ஆட்சி காலத்தில் எடப்பாடி பழனிசாமி அமைச்சராக இருந்தாரா? என்பது எனக்கு தெரியாது. கூவத்தூரில் சேர்ந்தார்கள். முதல்-அமைச்சராக வந்து விட்டார். 5 ஆண்டுகளில் கடன்தான் அதிகரித்துள்ளது. ரூ.66 ஆயிரம் கோடி வருவாய் பற்றாக்குறை உள்ளது. ஒவ்வொரு குடிமகன் மீதும் ரூ.60 ஆயிரம் கடன் வைத்து விட்டு போகிறார்கள். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 3 மாத காலத்தில் பல திட்டங்களுக்கு அடிக்கல்லை நாட்டினார். அவர் நாட்டிய அடிக்கல்லை எடுத்தால் பெரிய கட்டிடம் கட்டலாம். 5 ஆண்டுகளில் செய்ததை சொல்ல அவர் மறுக்கிறார். இந்தி மட்டுமே ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்பவர்கள்தான் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள். தமிழ் மீது இந்தி என்ற குரங்கு வந்து அமர்ந்து விடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story