திருச்செங்கோட்டில் விபத்து: பஸ் மோதி தனியார் நிறுவன ஊழியர் சாவு; மகள் கண்முன்னே பரிதாபம்
திருச்செங்கோட்டில் பஸ் மோதி தனியார் நிறுவன ஊழியர் மகளின் கண்முன்னே பரிதாபமாக இறந்தார்.
எலச்சிபாளையம்,
திருச்செங்கோடு கூட்டப்பள்ளி காலனியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 46). தனியார் நிறுவன ஊழியர். இவருடைய மகள் தர்ஷினி (8). இந்தநிலையில் கண்ணன் நேற்று தனது மகளுடன் மொபட்டில் திருச்செங்கோடு சென்றார். பின்னர் அவர்கள் 2 பேரும் திருச்செங்கோட்டில் இருந்து கூட்டப்பள்ளி காலனிக்கு மொபட்டில் திரும்பி கொண்டிருந்தனர்.
திருச்செங்கோடு கவுண்டம்பாளையத்தில் நகராட்சி தொடக்கப்பள்ளி அருகே சென்று கொண்டிருந்தபோது சாலையோரம் சரக்கு ஆட்டோ ஒன்று நின்றது. இதனை கண்ணன் முந்தி செல்ல முயன்றார். அப்போது சரக்கு ஆட்டோ டிரைவர் முரளி மோகன் (43) திடீரென ஆட்டோ கதவை திறந்தார்.
மகளின் கண் முன்னே பலி
இதனால் நிலைதடுமாறி கண்ணன் மொபட் ஆட்டோ கதவின் மீது மோதியது. இந்த விபத்தில் கண்ணன் சாலையின் நடுவிலும், தர்ஷினி சாலையோரத்திலும் விழுந்தனர். இதில் 2 பேரும் படுகாயம் அடைந்த நிலையில், எதிரே வந்த தனியார் பஸ் கண் இமைக்கும் நேரத்தில் கண்ணன் மீது மோதியது.
அப்போது பஸ்சின் பின் சக்கரம் கண்ணன் மீது ஏறி இறங்கியது. இதில் கண்ணன், மகள் தர்ஷினி கண் முன்னே ரத்த வெள்ளத்தில், துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இந்த கோர விபத்து குறித்து அந்த வழியாக சென்றவர்கள் திருச்செங்கோடு நகர போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
சோகம்
அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து, படுகாயமடைந்த சிறுமி தர்ஷினியை மீட்டு சிகிச்சைக்காக அருகில் இருந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் பலியான கண்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து தொடர்பாக சரக்கு ஆட்டோ டிரைவர் முரளி மோகன், தனியார் பஸ் டிரைவர் துரைராஜ் (40) ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பஸ் மோதிய விபத்தில் மகளின் கண்முன்னே தனியார் நிறுவன ஊழியர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story