பண்ணை வீட்டில் உள்ள கிணற்றில் சென்னை தொழில் அதிபர் பிணம் கொலையா? போலீசார் விசாரணை


பண்ணை வீட்டில் உள்ள கிணற்றில் சென்னை தொழில் அதிபர் பிணம் கொலையா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 7 Jun 2021 12:06 AM GMT (Updated: 7 Jun 2021 12:06 AM GMT)

பண்ணை வீட்டில் உள்ள கிணற்றில் சென்னையை ேசர்ந்த ெதாழில் அதிபர் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து அங்கு வேலை செய்யும் 5 பேரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சென்னை,

சென்னை ராயப்பேட்டை பாலாஜி நகரைச் சேர்ந்தவர் சுப்புராம் (வயது 60). தொழில் அதிபரான இவர், பிரிண்டிங் தொழில் செய்து வந்தார். காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த படூர் கிராமத்தில் இவருக்கு சொந்தமாக பண்ணை வீடும், கோழிப்பண்ணையும் உள்ளது.

கடந்த 4 நாட்களுக்கு முன்பு இவர் தனது டிரைவர் வசந்தகுமாருடன் காரில் படூர் கிராமத்தில் உள்ள தனது பண்ணை வீட்டுக்கு சென்றார். நேற்று காலை டிரைவரிடம் சுப்புராம் தண்ணீர் வாங்கி வரும்படி கூறினார்.

அதன்படி டிரைவர் தண்ணீர் வாங்கி கொண்டு வந்து பார்த்தபோது சுப்புராமை காணவில்லை. பண்ணை வீடு முழுவதும் சுற்றி பார்த்த டிரைவர், கடைசியாக அங்குள்ள கிணற்றில் சுப்புராமின் செருப்பு மிதந்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் பண்ணை வீட்டில் வேலை செய்யும் ஆட்களை வைத்து கிணற்றில் இறங்கி பார்த்தபோது சுப்புராம் கிணற்றில் பிணமாக கிடப்பது தெரியவந்தது.

கொலையா?

இது குறித்து சுப்புராமின் மகன் பிரீதம் அளித்த புகாரின்பேரில் உத்திரமேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பண்ணை வீட்டில் உள்ள கிணற்றில் சுப்புராம், தவறி விழுந்து இறந்தாரா? அல்லது யாராவது அவரை கிணற்றில் தள்ளி கொலை செய்தனரா? என்ற கோணத்தில் அங்கு வேலை செய்து வரும் தணிகைவேல் (58), ராஜேந்திரன்(30), விஜயலட்சுமி (36), ஜெயபிரகாஷ் (31) மற்றும் கார் டிரைவர் வசந்தகுமார் ஆகியோரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story